அமைச்சர் விஜயபாஸ்கரின் மா.செ பதவி பறிப்பு... பட்டாசு வெடித்து கொண்டாடிய எதிர் கோஷ்டி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் விடுவிக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இதையடுத்து புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விஜயபாஸ்கருக்கு எதிராக செயல்பட்டு வரும் சிலர், பட்டாசு வெடித்தும் , இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சி தலைமைக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் நிர்வாகிகள் பலரை களை எடுக்க அதிமுக பொதுச் செயலாளர் முடிவு செய்துள்ளார்.
மாவட்ட அளவில் ஆதரவு கோஷ்டிகளை உருவாக்கி, செயல்பட்டு வருவதால் அதிமுகவின் ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என கருதியதால், கட்சி நிர்வாகிகள் பலரை அதிரடியாக நீக்கி ஜெயலலிதா இன்று உத்தரவு பிறப்பித்தார்.
சின்னையா - ஆதரவாளர்கள்
இதன்படி, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் சின்னையா , காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலர் தண்டரை மனோகரன், தாம்பரம் நகர செயலர் கரிகாலன், புதுக்கோட்டை மாவட்டச் செயலர் விஜயபாஸ்கர் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்த உத்தரவில் தெரிவித்தார்.
அமைச்சர் பதவி
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சின்னையாவின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. சின்னையா, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தாம்பரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். கரிகாலன், தண்டறை மனோகரன் ஆகியோர் சின்னையாவின் ஆதரவாளர்கள் ஆவர். சின்னையாவும், அவரது ஆதராவளர்களும்
பதவி பறிப்புக்கு கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அந்த பொறுப்பிற்கு பி.கே.வைரமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயபாஸ்கரிடம் இருந்து மாவட்ட செயலர் கட்சி பதவி அதிரடியாக பறிக்கப்பட்டதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவரது எதிர்கோஷ்டியினர் பட்டாசுகளை வெடித்தும், லட்டு கொடுத்தும் கொண்டாடினர்.
உட்கட்சி பூசல்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அதிமுகவைச் சேர்ந்த புதுக்கோட்டை கறம்பக்குடி ஒன்றிய தலைவரான கெங்கையம்மாள், அவரது கணவரும் கருப்பட்டிப்பட்டி ஊராட்சி தலைவருமான சொக்கலிங்கம் உள்ளிட்டோர் விராலிமலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டுக்கு கடந்த மாதம் சென்றுள்ளனர். அப்போது தங்கள் பகுதியில் தாய்சேய் நல விடுதி அமைக்க விஜயபாஸ்கரிடம் கோரிக்கை விடுத்தனர்.
முத்தரையர் சமூக வாக்குகள்
ஆனால் இதை நிராகரித்த விஜயபாஸ்கர், கெங்கையம்மாளின் ஜாதி பெயர் சொல்லி விஜயபாஸ்கர் கேவலமாகத் திட்டியதாக முத்தரையர் சமூகத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி போராட்டமும் நடத்தினர்.
தீர்மானம் நிறைவேற்றம்
ஆனால் அதிமுக மேலிடமோ கெங்கையம்மாள், அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகியோரை கட்சியைவிட்டே நீக்கியது. இது முத்தரையர் சமூகத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் உள்ள 5 லட்சம் முத்தரையர்களும் தங்களது உறுப்பினர் அட்டையை தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கப் போவதாகவும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிப்போம் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
ஜெ. அதிரடி
அப்போதே விஜயபாஸ்கர் வசமிருந்து அமைச்சர் பதவி அல்லது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் விஜயபாஸ்கரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சி மீது கோபத்தில உள்ள முத்தரையர்களை சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு அதிமுகவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்னர் இன்னும் எத்தனை பேர் தலை உருளப்போகுதோ?