ஆவின் ஊழல் நஷ்டத்தை ஈடுகட்ட பால் விலையை உயர்த்துவதா?: எதிர்கட்சியினர் கண்டனம்!
சென்னை: பால் விலை உயர்வுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊழல் நஷ்டத்தை ஈடுகட்ட பால் விலையை உயர்த்துவதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் உயர்த்தப்பட்ட பால்விலையை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கருணாநிதி கண்டனம்
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஆவின்பால் நிறுவனத்தில் நடைபெற்ற கோடிக்கணக்கான ஊழலை மறைத்து விட்டு, அந்த நஷ்டத்தை ஈடுகட்டவே தமிழக அரசு பால் விலையை உயர்த்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பால் விலை உயர்வை கண்டித்துள்ள அவர், அதனை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஞானதேசிகன்
இதே போல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொள்முதல் விலைஏற்றத்தினைத் தவிர வேறு எந்த செலவும் அரசுக்கு ஏற்படப் போவதில்ல் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, மக்களைப் பாதிக்கின்ற பால் விலை உயர்வை அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
தா. பாண்டியன்
உணவுப் பொருட்களின் மூலம் தமிழக அரசு லாபம் பெற நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழக அரசு முதலில் ஆவின் பால் திருடப்படுவதை தடுத்து நிர்வாகத்தை சீர்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்
பசும்பால் கொள் முதல் விலை 5 ரூபாய் எருமைப்பால் விலை 4 ரூபாய் என உயர்த்திவிட்டு சமன்படுத்தப்பட்ட பால் விலையை ரூ.10 ஏற்றியிருப்பது ஏற்க முடியாதது.
மிகக் குறைந்த அளவில் கொள்முதல் விலையை அதிகரித்து விட்டு - பாலின் விலைச்சுமையை ரூ.10 ஏற்றி அதை மக்கள் மீது சுமத்துவது எந்த வகையில் நியாயம்.....இப்படிப் பால் விலையை தனியார் நிறுவனங்களுக்கு போட்டி போட்டு விலையை ஏற்றினால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்...
எனவே அரசு லாப நோக்கில் செயல்படாமல் மக்களுக்கு சேவை நோக்கில் செயல்படவேண்டும். இல்லையென்றால் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுவது மட்டுமல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்.
ராமதாஸ் கண்டனம்
இதேப்போன்று பாமக நிறுவனர் ராமதாஸும் பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் போது அதை சமாளிப்பதற்காக விற்பனை விலையை லிட்டருக்கு ஒரு ரூபாயோ அல்லது இரண்டு ரூபாயோ உயர்த்துவதில் தவறில்லை. ஆனால், ஒரே தடவையில் லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தினால், தினமும் ஒரு லிட்டர் பாலை பயன்படுத்தும் குடும்பத்திற்கு மாதம் ரூ.300 கூடுதல் செலவாகும்; பாலுக்காக மட்டும் ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ. 1350 வரை செலவிட வேண்டியிருக்கும். இதை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாது.
முதல் முடிவே இப்படியே
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட பிறகு முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மக்களை பாதிக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது ஆகும். ஒருவேளை ஜெயலலிதா ஆட்சியே பரவாயில்லை என்று மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டே அவரது ஆட்சியில் இருந்ததைவிட அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்த ஓ.பன்னீர்செல்வம் அரசு முடிவு செய்திருக்கிறதா? எனத் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், மக்களின் சுமையை உணர்ந்து பால் விற்பனை விலை உயர்வை தமிழக அரசு முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.
தி. வேல்முருகன்
விலை வாசி உயர்வால் பெரும் வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொண்டிருக்கும் பால் உற்பத்தியாளர்கள் நலனைக் கொண்டு பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது என்பது சரியான நடவடிக்கைதான். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் எருமைப்பால் லிட்டருக்கும் 4-ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ 23 ல் இருந்து ரூ 28 ஆகவும் எருமைப்பால் கொள்முதல் விலை ரூ31 ல் இருந்து ரூ35 ஆகவும் உயர்ந்துள்ளது.
மக்களைப் பாதிக்கும்
அதே நேரத்தில் இந்த கொள்முதல் விலை உயர்வின் அடிப்படையில் சமன்படுத்திய பால் விற்பனை விலை ரூ 24 ல் இருந்து 34 ஆக உயர்த்தப்பட்டிருப்பது எளிய மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். 3 ஆண்டுகளுக்குப் பின்னரான விற்பனை விலை உயர்வாக இருந்தாலும் ரூ10 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்பது ஏழை எளிய மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய ஒன்றாகும்.
மறுபரிசீலனை
இத்தகைய விலை உயர்வை எளிய அடித்தட்டு மக்களால் சமாளிக்க முடியாது. இதனால் இந்த ஆவின் பால் விற்பனை ரூ10 என்கிற அதிகப்படியான விலையை தமிழக அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும்.