ஓ.பி.எஸ். மாடுபிடி வீரரா... துரைமுருகன் கேள்வி... பேரவையில் சிரிப்பலை
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாடுபிடி வீரரா என்றும், அவர் ஏன் ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்கப்படுகிறார் எனவும் எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கி சட்டம் இயற்றியதால் அவர் ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்கப்படுகிறார் எனக் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனுக்கு மாடுபிடிக்கும் விருப்பம் இருந்தால் புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம் என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
துரைமுருகன் நக்கல்
கடந்த வெள்ளிக்கிழமை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன் மீதான பொதுவிவாதம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பி.எஸ். எனக் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், துணை முதல்வர் ஓ.பி.எஸ். மாடுபிடி வீரரா என்றும், இவ்வளவு நாள் தனக்கு தெரியாமல் போய்விட்டதே எனவும் தெரிவித்தார். மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஓ.பன்னீர்செல்வம் மாடு பிடிப்பதை காண தாம் ஆவலுடன் உள்ளதாக கூறினார்.
ஜல்லிக்கட்டு நாயகன்
துரைமுருகன் செய்த நக்கலுக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கி சட்டம் இயற்றி தந்ததால் அவர் ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்கப்படுகிறார் எனக் கூறினார். மேலும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் பங்கேற்று மாடுபிடிக்க வந்தால் அதற்கான ஏற்பாட்டை செய்து தருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இருவரின் பேச்சாலும் சட்டமன்றத்தில் சிரிப்பலை எழும்பியது.
வணக்கம்
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது இருக்கையில் இருந்தவாறே திமுக உறுப்பினர்களை பார்த்து அவ்வப்போது புன்னகைப் பூத்தார். மேலும், அவர் திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 11,000 கோடி கூட்டுறவுத்துறை மூலம் வட்டியில்லா கடன் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு கடனை பொறுத்தவரை கட்சி பேதமின்றி உண்மையான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கூட்டுறவு வங்கி கடனை பொறுத்தவரை கட்சி பார்த்து எதுவும் செய்யவில்லை என தெரிவித்தார்.
வெளிநடப்பு
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை கடந்த ஜனவரி 8-ம் தேதி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேரவையில் தெரிவித்ததாக கூறி திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினார். மேலும் அமைச்சர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கும்படி அவர் வலியுறுத்தினார். ஆனால், அப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்ததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.