பதவி பித்து பிடித்து அலைகிறார் ஸ்டாலின்.. போட்டுத்தாக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ!
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதவி பித்து பிடித்து அலைவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவை: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதவி பித்து பிடித்து அலைவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவையில் கூட்டுறவு வங்கி வார விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் இதுவரை கொள்ளையே நடக்காது வங்கி கூட்டுறவு வங்கிதான் என பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சரமாரியாக சாடினார்.
ஸ்டாலின் பதவி பித்து பிடித்துள்ளது
எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பதவி பித்து பிடித்து அலைவதாக அவர் கூறினார். முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் ஸ்டாலின் ஏதேதோ பேசி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மனைவிக்கு வலியுறுத்தல்
மேலும் அரசு மீது இல்லாததையும் பொல்லாததையும் ஸ்டாலின் பேசுவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மேலும் பதவி பித்து பிடித்துள்ள ஸ்டாலினை அவரது மனைவி நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தினார்.
நிறுத்திக்கொள்ள வேண்டும்
அமைச்சர்களை ஸ்டாலின் கேவலமாக பேசுவதாகவும் அவர் கூறினார். இதனை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தயாராக இருக்கிறோம்
எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்றுவதை நிறுத்திவிட்டு தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மேலும் தவறு இருந்தால் அதனை திருத்திக்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.