அனிதா தற்கொலை.. அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் இன்று முழு அடைப்பு
திருச்சி: அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரியலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் அரியலூர் மாவட்ட மாணவி அனிதா. ஆனால் மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தரவில்லை. உச்சநீதிமன்றத்தில் திடீரென பல்டியடித்து நீட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது மத்திய அரசு.
இதனால் டாக்டர் கனவுபறிபோன ஆதங்கத்தில், அனிதா, மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார். தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி அரியலூரில் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்தற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரியலூர் நகரி்ல பல கடைகள் மூடப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 5ம் தேதி ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.