மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மறியல்... தமிழகம் முழுவதும் போராட்டங்கள்!
கோயம்புத்தூர் : உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் ரயிலை மறித்தும், சென்னையில் சாலை மறியலிலும் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு 6 வார காலக்கெடு வழங்கி கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் காவிரி மேலாண்மை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் 30 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூர், திருவான்மியூர், வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சைதையில் மா.சுப்பிரமணியன் தலைமையில் அண்ணாசாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல இடங்களில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் அஞ்சல் நிலையத்தை பூட்டி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையை மறித்தும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் திமுகவினர் கோவையில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தமிழகம் முழுவதும் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடலூர் - திருச்சி பயணிகளை மறித்து புதிய தமிழகம் கட்சியினர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் படுத்துக்கொண்டும், ரயிலின் மீது ஏறியும் புதிய தமிழகம் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் மட்டுமின்றி திருச்சியில் உள்ள இதர ரயில் நிலையங்களிலும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று புதுச்சேரியில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய வருமான வரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் போட்டிருந்த தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு இவர்கள் முற்றுகையிட முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications