தமிழக அரசின் நிவராண உதவிகள் போதுமானவை அல்ல... கருணாநிதி, ராமதாஸ், விஜயகாந்த் கடும் எதிர்ப்பு
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தமிழக அரசின் நிவாரண உதவிகள் போதுமானவை அல்ல என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மழை வெள்ளத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள், கூலி தொழிலாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் உடமைகளை இழந்துள்ளனர். விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று நிவாரண உதவிகளை அறிவித்திருந்தார். இந்த உதவித் தொகை போதுமானது அல்ல என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆதாயம்?
இது குறித்து கருணாநிதி கூறுகையில், சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. வெள்ள நிவாரண உதவி நிதியை தேர்தல் கண்ணோட்டத்தோடு வழங்குவார்களா? இன்றைய சர்க்காரைப் பொறுத்த வரையில் அவர்கள் கடந்த காலங்களில் இது போன்ற நிவாரண உதவிகளை தங்கள் சொந்த ஆதாயத்திற்காகத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதைப்போல்தான் வெள்ள நிவாரண உதவி என்ற பெயரில் அரசின் இந்த உதவித் தொகையையும் தேர்தலுக்காக பயன்படுத்துவார்கள். கடந்த காலங்களில் இதுபோன்ற தவறுகளை செய்து பழக்கப்பட்டவர்கள் என்பதால் இந்த உதவி நிதியும் முறையாக வழங்கப்படாது. அதனால்தான் அனைத்துக் கட்சிகளின் குழுக்கள் அமைத்து நிவாரண உதவி வழங்கப்படவேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிக்கை விடுத்தார்கள். ஆனால் அதிமுக அரசு அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
ஜெ. போகவில்லையே
கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்ட போதிலும் மற்ற கட்சிக்காரர்கள் நேரில் சென்று பார்த்துள்ளார்கள். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா போகவில்லையே? தமிழகத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது; அங்கெல்லாம் முதலமைச்சர் போகாதது சரியல்ல; அங்கு சென்று நேரில் ஆறுதல் கூறியவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்று கூறியுள்ளார்.
டிடி எடுத்து கொடுங்க
தே.மு.க. தலைவர் விஜயகாந்த் தமது அறிக்கையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உடைமைகளை இழந்து தவிப்பவர்களுக்கு இந்த தொகை மிகவும் குறைவானதாகும். எனவே பாதிப்பிற்கு ஏற்ற வகையில் நிவாரண தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர்கள் காபிக்கு சர்க்கரை கேட்கவில்லை, குடிக்கின்ற கூழுக்கு உப்பு தான் கேட்கிறார்கள். அதைத் தருவதற்கு கூட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனமில்லையா? அதிமுக அரசு நிவாரணத் தொகையை அதிகப்படுத்தி உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும்.வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு அவர்களது பெயரில் வரைவோலை (டிடி) வழங்கி அதன்மூலம் அவர்கள் பணம் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யவேண்டும் என்றார்.
குடிசைக்கே ரூ15 ஆயிரம்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமது அறிக்கையில், பெரும்பாலான வீடுகளில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்துள்ளன. ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.5,000 நிவாரண உதவி என்பது மிக மிகக் குறைவான தொகையாகும். தமிழகத்துடன் ஒப்பிடும்போது புதுவையில் மழை பாதிப்பு மிகவும் குறைவாகும். எனினும், அங்கு குடிசைகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி இறந்த மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடும் போதுமானது அல்ல. கரும்பு போன்ற நீண்டகால பயிர்களை சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.2.07 லட்சம் செலவாகும் என வேளாண்மை பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ள நிலையில், வெறும் ரூ.18,000 இழப்பீடு வழங்குவது விவசாயத்தையும், விவசாயிகளையும் சிறுமைப்படுத்தும் செயலாகும் என்று கூறியுள்ளார்.