சேலம் - சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து எதிர்க்கட்சிகளை இணைத்து போராடுவோம் : முத்தரசன்
சேலம் - சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து எதிர்க்கட்சிகளை இணைத்து போராடுவோம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சேலம் -சென்னை இடையே 277 கிமீ., 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்காக பூர்வாங்க பணிகள் திவீரமாக நடந்து வருகிறது.
இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், இதை எதிர்த்து தன்னிச்சையாகவே 5 மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்த திட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜுலை 4ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளும் தொடர்ந்து போராட்டத்தில் இறங்கவுள்ளன.
ஏற்கனவே சேலம் - சென்னை இடையே 3 வழித்தடங்கள் உள்ளன. அவற்றை மேம்படுத்தாமல், புதிதாக சாலை அமைப்பது தேவையற்றது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அரசாக இருந்தால், இதுகுறித்து மக்களிடம் கருத்து பெற்றிருப்பார்கள்.
ஆனால், இந்த அரசு மக்கள் கருத்து குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விரைவில், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.