ஓபிஎஸ்க்கு புத்துணர்வு சிகிச்சை.... கோவை மருத்துவமனையில் அனுமதி
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உடல்நலக் குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல், மன ரீதியான புத்துணர்வுக்காக 7 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனையை ஏற்க ஈபிஎஸ் அணியினர் ஏற்க தயாராக இல்லை.
அதே நேரத்தில் நிபந்தனை எதுவும் இன்றி பேச தயாராக இல்லை என்று ஓபிஎஸ் அணியினர் கூறி விட்டனர். இது மேலும் சிக்கலை ஏற்படுத்திது. இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது.
இந்த நிலையில் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்கும் விதமாக ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். காஞ்சிபுரத்தில் தொடங்கிய பயணம் நெல்லை வரை நீடித்தது.
பேச்சுவார்த்தை குழுவையும் கலைத்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கோவை புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் வைத்திய சாலையில் ஒருவாரம் புத்துணர்வு சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாத இறுதியில் 2 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்ற ஓபிஎஸ் மீண்டும் தர்மயுத்தம் பயணத்தை நடத்தினார். இந்த நிலையில் மீண்டும் ஒருவாரம் சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.