ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம், கரும்பு... பொங்கல் பரிசு அறிவித்தார் ஒபிஎஸ்
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது, ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கு இலவச பொங்கல் பை வழங்கும் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார். அதன்படி பச்சரிசி, வெல்லம், பாசிப்பயிறு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய இலவச பொங்கல் பை வழங்கப்பட்டது. இதையடுத்து, 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் கை விடப்பட்டது.
பின்னர், 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இலவச பொங்கல் பை திட்டத்திற்கு பதில், இலவச அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிச்சி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு துண்டு கரும்பு மற்றும் ரூ.100 ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதன்பிறகு தொடர்ந்து பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 5ஆம் தேதி உடல் நலக்குறைவினால் ஜெயலலிதா மரணமடைந்தார். அவருக்குப் பின்னர் முதல்வராக 3வது முறையாக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசினை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இதன்படி ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு கிலோ பச்சரிச்சி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு துண்டு கரும்பு மற்றும் ரூ.100 ரொக்கம் வழங்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.