ஸ்டிரைக் செய்த போக்குவரத்து ஊழியர்களுக்கு 'சாதனை ஊக்கத் தொகை' அறிவித்த ஓ.பி.எஸ்!
சென்னை: தமிழகத்தில் பணியாற்றும் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 800 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு 7 கோடியே 70 இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தை நசுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் முடியாமல் போகவே அரசு ஒருவழியாக ஊழியர்களின் கோரிக்கைக்கு பணிந்து 7 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் 1 இலட்சத்து 37 ஆயிரத்து 800 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
இந்தியாவிலேயே முதன்மை நிலைக்கு தமிழகத்தை அழைத்துச் செல்லும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்களும், பணியாளர்களும் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
அத்தகைய தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் சிறப்பான வாழ்க்கைத் தரம் அமைத்துக் கொடுத்தால்தான், தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தி அவர்கள் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் செயல்பட முடியும்.
அதற்கேற்ற வகையில், வரும் பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களில் 2014ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கு குறைவாகவும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்குக் குறைவாகவும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும்; 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக "சாதனை ஊக்கத்தொகை" வழங்கிட தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆணையின் காரணமாகப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் 1 இலட்சத்து 37 ஆயிரத்து 800 பணியாளர்களுக்கு, மொத்தம் 7 கோடியே 70 இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.