சசிகலாவை நீக்கும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுசூதனன், ஓபிஎஸ் பங்கேற்பு?
சசிகலாவை நிக்கும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுசூதனன், ஓபிஎஸ் பங்கேற்க கூடும் என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் என்ற முறையில் மதுசூதனனும் பொருளாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வமும் கலந்து கொள்ளக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவின் அணிகள் இணைப்பின் உச்சகட்டமாக சசிகலா, பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட இருக்கிறார். இதற்காக நாளை அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
மதுசூதனன், ஓபிஎஸ்
இந்த கூட்டத்துக்கு அதிமுக அவைத் தலைவர் என்ற முறையில் மதுசூதனன் தலைமை வகிப்பார் என கூறப்படுகிறது. மேலும் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் பங்கேற்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
சசி நீக்க கையெழுத்து
அத்துடன் சசிகலாவை பொதுச்செயலராக நியமித்த கடிதத்தில் இருவரும் கையெழுத்திட்டிருந்தனர். தற்போது சசிகலாவை முறைப்படி நீக்க இருப்பதாலேயே இந்த கூட்டத்தில் மதுசூதனனும் ஓபிஎஸ்ஸும் பங்கேற்பார்கள் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரட்டை இலை, அதிமுக பெயர் மீட்பு
இதையடுத்து சசிகலா நீக்கப்பட்ட தகவல் முறைப்படி தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். இப்படி செய்தால்தான் அதிமுக கட்சி பெயரும் இரட்டை இலை சின்னமும் கிடைக்கும் என்பதால் மதுசூதனனும் ஓபிஎஸ்ஸூம் பங்கேற்கிறார்கள் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
நியமனங்கள் செல்லாது
மேலும் சசிகலா நீக்கப்படும் நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட அனைத்து நியமனங்களும் செல்லாது என்றாகும். தினகரனின் துணை பொதுச்செயலர் பதவியும் செல்லாது என்பது உறுதிப்படுத்தப்படும்.