தங்கத்தின் மீட்டிங்கை புறக்கணித்த ஓபிஎஸ்... சொந்த ஊரிலேயே மரியாதை இல்லையே...
சென்னை: தேனி மாவட்டத்தில் தங்க தமிழ்செல்வன் நடத்திய பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றால் தனக்கு உரிய மரியாதை கிடைக்காது என்று நினைத்த ஓ.பன்னீர் செல்வம், அந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
நல்ல நேரமாக இருந்தால் காகிதம் கூட கோபுரத்தில் ஒட்டிக்கொள்ளும்... அதே நேரத்தில் நேரம் சரியில்லா விட்டால் அதே காகிதம் கீழே விழுந்து மண்ணோடு மண்ணாகி விடும். அரசியலில் இது முற்றிலும் பொருத்தமானது.
ஆண்டிபட்டி தொகுதியில் தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏவும், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் எதிரும், புதிருமாக செயல்பட்டனர். இதன் காரணமாக தங்கதமிழ் செல்வன் நடத்தும் கூட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வதில்லை எனக் கூறப்பட்டது.
கட்சியில் இருந்து ஒபிஎஸ் ஓரங்கட்டப்படவே அதிமுகவில் தங்க தமிழ்செல்வன் கை மீண்டும் ஓங்கி வருகிறது. சமீபத்தில் தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக தங்கதமிழ்செல்வன், நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, தேனியில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், அவரது தலைமையில் 23ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மட்டும் வந்திருந்தார்.
தங்கதமிழ்செல்வன் ஆதரவாளர்களோ, ஓபிஎஸ் கூட்டத்தை புறக்கணித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ்ஸை வரவேற்க நீண்டநேரம் காத்திருந்த தங்கதமிழ்செல்வன் ஏமாற்றமடைந்தார் என்று கூறி வருகின்றனர்.
கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, முக்கிய வேலை காரணமாக ஓபிஎஸ் சென்னை சென்று விட்டார். தான் கலந்துகொள்ள முடியாததால், கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கலந்துகொள்ளும்படி கூறினார் என்று தெரிவித்துள்ளார்.
புறக்கணித்த காரணம் என்ன?
அதே நேரத்தில் காரணம் அதுவல்ல... இது வேறு என்று காதை கடிக்கின்றனர் தேனி மாவட்ட அதிமுகவினர். கடந்த சனிக்கிழமை தங்க.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்த ஜெயலலிதா பேரவை தேர்தல் ஆயத்த கூட்டத்தில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
ஜெ. பேரவை கூட்டம்
அந்தக் கூட்டத்தில், ‘23ம் தேதி ஜெயலலிதா பேரவை சார்பில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஓபிஎஸ், வருவாய்த் துறை அமைச்சர் உதகுமார் கலந்து கொள்வார்கள்' என தங்க.தமிழ்ச்செல்வன் அறிவித்தார்.
தேரோட்டத்தில் ஓபிஎஸ்
கடந்த ஞாயிறன்று தேனி மாவட்டத்திற்கு வந்த ஓபிஎஸ்சை தங்கதமிழ்செல்வன் சந்திக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து செவ்வாய்கிழமை மதியம் திடீரென பெரியகுளம் வந்த ஓபிஎஸ், பாலசுப்பிரமணிய சாமி கோயில் தேரோட்டத்தில் கலந்து கொண்டார்.
சென்னை பயணம்
இதனால், 23ம் தேதி ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டத்தில் தனக்கு உரிய மரியாதை கிடைக்காது என நினைத்து நேற்று முன்தினம் நள்ளிரவே திடீரென சென்னை புறப்பட்டு சென்றார்.
சால்வையில் சங்கதி
அதேநேரத்தில் நேற்றைய கூட்டத்தில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் பங்கேற்றார். தங்க.தமிழ்ச்செல்வன் மற்றும் அமைச்சர் உதயகுமாருக்கு மட்டும் கட்சியினர் சால்வை அணிவித்தனர். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு சிலர் மட்டும் சால்வை அணிவித்தனர். தங்க.தமிழ்ச்செல்வன் பெயரை கூறும்போதெல்லாம், தொண்டர்கள் விசில் அடித்து ஆர்ப்பரித்தனர்.
ஒபிஎஸ் மகன் அப்செட்
இதனால், மேடையில் இருந்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் அப்செட்டானார். பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டிருந்த விளம்பரத்தில் ரவீந்திரநாத்குமாரின் பெயரை மிகச் சிறியதாக கீழே போட்டிருந்தனர்.
முதல்மரியாதை
தங்க.தமிழ்ச்செல்வனுக்கு பொறுப்பு வழங்கப்படுவதற்கு முன், ரவீந்திரநாத் குமார் தலைமையில் செயல்படும் தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு முதல்மரியாதை அளிக்கப்பட்டு வந்தது.
ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்
போடியில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கட்சி சார்பில் இலவச திருமணங்களை நடத்தி வைத்தார் ஓபிஎஸ், அதன்பின்னர் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளால் கார்டனைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். அவரது ஆதரவாளர்கள் நான்கு பேரை சென்னை, மத்திய குற்றப் பிரிவு போலீஸ் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மாறிய அதிகாரம்
அதிகாரத்தில் இருந்தபோது, சொந்த மாவட்டத்தில் தனக்கு எதிரான அணியை ரொம்பவே மட்டம் தட்டி வைத்திருந்தார் ஓபிஎஸ் இதில் மிக முக்கியமானவர் ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்க.தமிழ்செல்வன். இப்போது ஓபிஎஸ் நிலை கட்சியில் சற்று சரியில்லாமல் உள்ளதால் மாவட்டத்தில் தங்க தமிழ் செல்வனின் கை ஓங்கியுள்ளது என்கின்றனர் தேனி மாவட்ட அதிமுகவினர்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்பதை அறியாதவரா ஓபிஎஸ்?.