முதல்வர்,டிடிவி மீது வழக்கு பதிய பரிந்துரை... மாஃபா.பாண்டியராஜன் வரவேற்பு!
முதல்வர் பழனிசாமி,டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
நெல்லை : ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது வழக்கு பதிய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் குதிரை பேர அரசியல் குற்றச்சாட்டு விரக்தியின் விளிம்பில் இருந்து வைக்கோலை பிடித்து கொண்டு மூழ்கிவிடாமல் மிதக்க வேண்டும் என்பதற்காக செய்வதைப் போல உள்ளது. எங்கள் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன் பேசியதாக ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் மார்பிங் செய்யப்பட்டு வீடியோ ஒளிபரப்பபட்டுள்ளது.
இந்த வீடியோவை பதிவு செய்த உடனேயே வெளியிடாமல் மூன்றரை மாதம் கழித்து வெளியிட வேண்டிய அவசியமில்லை இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் டிடிவி.தினகரன் மீது தலைமை தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்ய பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
பாஜகவிற்கு கருவியாக நாங்கள் ஒருபோதும் இல்லை, 3 மாதத்தில் தமிழகத்தில் பலம் பெறுவோம் என தமிழிசை கூறியது, இதுவரை பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது. இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி எங்களை விட அதிகமாக அதிமுக அம்மா அணி பிரமாணபத்திரம் தாக்கல் செய்திருந்தாலும், எத்தனை பேர் என்பதை குறிப்பிடவில்லை, அதில் பெரிய தவறுகள் நடந்துள்ளது.