தினகரனை எடப்பாடி கோஷ்டி நீக்கிய நிலையில் ஓபிஎஸ் அவசர ஆலோசனை
டிடிவி தினகரனை கட்சிப் பொறுப்புகளிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அணி நீக்கிய நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனை கட்சியிலிருந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கிய நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அலுவலகத்தில் இன்று அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அணிகள் இணைப்பது பற்றியும் பேசப்பட்டது. அப்போது சலசலப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சசிகலாவினால் டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது சட்ட விரோதம் என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் நியமனம் செல்லாது எனவும், அதிமுக பொறுப்பாளர்களை தன்னிச்சையாக நியமித்திருக்கிறார் எனவே அதுவும் செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள ஓபிஎஸ் அணியினர் சென்னை, கிரீன் வேஸ் சாலையிலுள்ள ஓபிஎஸ் இல்லத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கூட்டத்தில், ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, பாண்டியராஜன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
நீண்டகாலமாக தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணி கோரிக்கை வைத்து வந்தது. அதை இப்போது எடப்பாடி அணி செய்துள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக்கூட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது.