சசிகலா காலில் விழுந்தவர் ஓபிஎஸ்.. மோடிக்கு பயந்து என்னை நீக்குகிறார்கள்.. கேசி பழனிச்சாமி பகீர்
சசிகலா காலில் விழுந்தவர் ஓபிஎஸ் என்றும் மோடிக்கு பயந்து தன்னை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள் என்றும் கேசி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: சசிகலா காலில் விழுந்தவர் ஓபிஎஸ் என்றும் மோடிக்கு பயந்து தன்னை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள் என்றும் கேசி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுக முன்னாள் எம்பியும் செய்தித்தொடர்பாளருமான கேசி பழனிச்சாமியை அதிமுக தலைமைக்கழகம் கட்சியில் இருந்து நீக்கியது.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதிவியில் இருந்தும் கேசி பழனிச்சாமி நீக்கப்பட்டுள்ளார். அவருடன் கட்சித் தொண்டர்கள் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
சரமாரி சாடல்
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கேசி பழனிச்சாமி, துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக சாடினார். காவிரிக்காக ஓபிஎஸும் ஈபிஎஸும் என்ன செய்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தனக்கு அவசியம் இல்லை
ஓ.பன்னீர்செல்வத்துக்கு மோடி மீது பயம் இருக்கலாம். ஏனெனில் அவர் மீது கொள்ளை, ஊழல் வழக்குகள் இருக்கலாம், ஆனால் தன்மீது அதுபோன்ற எந்த வழக்கும் இல்லாதததால் தான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கேசி பழனிச்சாமி கூறினார்.
சசிகலா காலில் விழுந்தவர்
அன்று கையைக் கட்டிக்கொண்டு சசிகலாவின் காலில் விழுந்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்று விமர்சித்த கேசி பழனிச்சாமி, தான்தான் சசிகலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தேன் என்றும் தெரிவித்தார்.
மோடிக்கு பயந்து
ஆனால் ஓபிஎஸும் ஈபிஎஸும் மோடிக்கு பயந்துகொண்டு தன்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். தான் எம்ஜிஆரால் கட்சியில் சேர்க்கப்பட்டவன் என்றும் ஜெயலலிதாவால் எம்எல்ஏ, எம்பியாக்கப்பட்டவன் என்றும் தன்னை நீக்கியது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.