பாஜகவின் ஏஜெண்ட்டுகள் ஓபிஎஸும் ஈபிஎஸும்.. அதிமுக பிளவுக்கு மோடிதான் காரணம்.. தினகரன் கடும் விமர்சனம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பாஜகவின் ஏஜெண்ட்டுகள் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பாஜகவின் ஏஜெண்ட்டுகள் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தேனியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் மீண்டும் கட்சியில் சேர முதல்வர் மோடிதான் காரணம் என்றார்.
பிரதமர் மோடி கூறியதாலேயே கட்சி இணைப்புக்கு ஒப்புக்கொண்டதாக கூறிய அவர் சசிகலா மற்றும் தினகரன் மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அதிமுகவை அழிக்க திட்டம்
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஓபன் டாக் குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை அழிக்கும் நோக்குடன் பிரதமர் மோடி செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார்.
பாஜகவின் ஏஜெண்ட்டுகள்
பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்ட்டாக ஓ.பி.எஸ். மாறிவிட்டார் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். பா.ஜ.க.வின் முதல் ஏஜெண்ட் ஓ.பன்னீர்செல்வம், இரண்டாவது ஏஜெண்ட் எடப்பாடி பழனிச்சாமி என்றும் டிடிவி விமர்சித்துள்ளார்.
பிரித்தது பாஜகதான்
ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வத்தை தியானம் செய்ய வைத்ததும் பின்னர் அதிமுகவில் பிளவை ஏற்படுத்த தூண்டியதும் பாஜகதான் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
சசிகலா நினைத்திருந்தால்
சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதல்வராக பொறுப்பேற்றிருக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா இறந்தவுடன் சசிகலா முதல்வர் ஆகியிருந்தால் யாரும் தடுத்திருக்க முடியாது என்றும் டிடிவி.தினகரன் கூறினார்.
சசிகலாதான் காரணம்
ஆனால் அவ்வாறு செய்யாமல் சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தையே முதல்வராக்கியதாகவும் கூறினார். ஓ.பன்னீர்செல்வத்தின் படிப்படியான உயர்வுக்கு சசிகலா தான் காரணம் என கூறியுள்ளார்.
தினகரன் கடும் விமர்சனம்
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவையும், சின்னத்தையும் காட்டிக்கொடுத்தது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் என்றும் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார்.