ஹைகோர்ட்டுக்கு கொஞ்சம் கூட மரியாதையே இல்லை.. பெரியகுளத்தில் முதல்வர், துணை முதல்வரின் பேனர்கள்!
உயிருள்ளவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தும் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முதல்வர், துணை முதல்வரின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வரிசை கட்டி வருகின்றன.
பெரியகுளம்: உயிருள்ளவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தும் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மெகா சைஸ் பேனர்கள் வரிசை கட்டி வருகின்றன.
தமிழகம் முழுவதும் பிறந்த நாள், திருமண நாள் தொடங்கி நினைவு நாள் வரையிலும், அரசியல் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என அனைத்துக்கும் பேனர் வைக்கும் கலாசாரம் மேலோங்கி உள்ளது.
இரு ஆள்கள் உயரத்துக்கு பேனர்களை வைப்பதால் சாலை மறைத்துக் கொண்டு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இந்த பேனர்களில் உள்ள அரசியல் கட்சியினரின் புகைப்படத்தை மற்ற கோஷ்யினரோ மற்ற கட்சியினரோ கிழித்து விட்டாலோ போலீஸாருக்கு பெரும் தலைவலி ஏற்படுகிறது.
இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனது வீட்டருகே ஏராளமான பேனர்களும், கட்சி விளம்பரங்களும் வைக்கப்படுவதால் தொல்லை ஏற்படுகிறது. மேலும் இதுகுறித்து காவல் துறையில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
அந்த மனுவை நீதிபதி வைத்தியநாதன் விசாரணை நடத்தினார். அப்போது நீதிபதி கூறுகையில், உயிருடன் உள்ளவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம் பெறக் கூடாது என்று தமிழக தலைமை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை சிறிதும் மதிக்காமல் பெரியகுளத்தில் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட மெகா சைஸ் பேனர்களை தற்போதே வைக்க தொடங்கியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பெரியகுளம் துணை முதல்வரின் சொந்த ஊர் என்பதால் காவல் துறையினரும் பேனர்களை அகற்ற முன்வரவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.