டி.டி.வி தினகரனை சமாளிக்க ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்!
தினகரனின் அரசியலை சமாளிக்க ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தங்கள் ஆக்ஷன் அவதாரத்தை காட்டி உள்ளனர்.
நடந்து முடிந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்து உள்ளார். இதனால் அதிமுகவில் மீண்டும் அணித்தாவல் படலம் ஆரம்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இன்று நடந்த அவசர உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் இதுநாள் வரை கடைபிடித்து வந்த அமைதியை விடுத்து தங்களது ஆக்ஷன் அவதாரத்தை எடுத்து உள்ளனர். இதனால், கட்சி நிர்வாகிகள் என்ன செய்யலாம் என்று யோசித்து வருகின்றனர்.
நீக்கப்பட்ட 9 நிர்வாகிகள்
உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை; உள்ளே இருந்துகொண்டு உள்ளடி வேலைகளை பார்ப்பவர்களுக்கு இங்கு இடமில்லை என்று கூட்டறிக்கை கொடுத்த சிறுது நேரத்திலேயே கட்சி நிர்வாகிகள் தங்க தமிழ்செல்வன், பாப்புலர் முத்தையா, வெற்றிவேல், புகழேந்தி , சி.ஆர்.சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 9 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மன்னிக்க முடியாத குற்றம்
மேலும், கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன் எதோ மாயாஜாலம் செய்து வெற்றி பெற்று உள்ளார். அடிமட்டத்தில் உள்ள உண்மையான கட்சி தொண்டன் கூட ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டு இருக்கமாட்டான். ஆனால், தங்கள் சுயநலத்திற்காக வீடியோ வெளியிட்டவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டார். மேலும், இனி கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்தார்.
தினகரன் ஒரு மாயமான்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியபோது, அரசியலில் தினகரனுக்கு சீனியர் நான். என்னமோ எங்களை எல்லாம் அவர் தான் அரசியலுக்கு கொண்டு வந்தது போலவும், ஆட்சியையே அவர் தான் கையில் வைத்திருந்தது போலவும் பேசி வருகிறார்.நேரத்திற்கு தகுந்தாற் போல பேசி வருவது மட்டும் தான் அவரது பலம். அவரை நம்பி போனோருக்கு ராமயணத்தில் மாயமானை பின் தொடர்ந்து சென்றவர்களுக்கு என்ன கதியோ அது தான் ஏற்படும் என்று தெரிவித்தார்.
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆக்ஷன் அவதாரம்
இந்த நிர்வாகிகள் நீக்கம் நடவடிக்கையை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தாலும், மறுபுறம் தேர்தலுக்கு முன்பும் டி.டி.வி தினகரன் ஊடகங்களை கையாண்ட விதம் அவருக்கு மக்களிடையே ஆதரவை பெற்றுத்தந்து உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் இன்னமும் அவருக்கான ஆதரவு அதிகரிக்கும் என்று உணர்ந்து கொண்ட ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ், இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பை நிதானமாக கையாண்டனர். மேலும் அவர்கள் கேள்விக்கு பதிலளிக்கும் விதமும் மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், தினகரனை சமாளிக்க அனைத்து வகையிலும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தயாராகி வருகிறார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.