இன்னும் பல நூறாண்டு அதிமுக ஆட்சி நடத்தும்.. எம்.ஜி.ஆர் சமாதியில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் உறுதிமொழி
எம்.ஜி.ஆர் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சென்னை : முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவுநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கட்சியினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 30ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மரியாதை செலுத்திய பின் அ.தி.மு.க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும், தமிழகத்தின் நல்வாழ்விற்காக செயல்பட்டு வரும் அ.தி.மு.க தலைமையிலான அரசு இன்னும் பல நூறு ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் என்றும், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்துக்கொடுத்த பாதையில் பயணித்து தமிழகத்திற்கான அரசியல், சமூக நீதி உரிமைகளை பெற்று தருவோம் என்றும் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள், ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டனர். உறுதிமொழிக்கு எடுத்துக்கொண்ட பிறகு, ஜெயலலிதா சமாதியிலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.