சான்ஸ்க்காக காத்திருந்த ஓபிஎஸ் அணி... முதல்வர் போட்ட தீர்மான நகலுடன் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் மனு!
சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி : தாங்களே உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் புதிய மனுவை அளித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது கட்சியின்சட்டவிதிகளுக்கு எதிரானது என்று ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. இந்நிலையில் சசிகலா நியமனம் குறித்து பிரமாணப் பத்திரங்களைத்தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கூறியதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் ஒன்றரை லட்சம் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர், தினகரன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்று அமைச்சர்கள் அதிமுகவினர் கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வர் பழனிச்சாமி நேற்று அதிமுகவினருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனின் நியமனம் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றிய தீர்மானத்தை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையத்தில் கூடுதல் மனு அளித்துள்ளனர். ஓ.பிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், செம்மலை, மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இம்மனுவை தாக்கல் செய்தனர். அதில் தாங்களே உண்மையான அதிமுக என்றும் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.