முதல்வர் ஓபிஎஸ் 60 வது நாள்... சவால்களை சமாளித்து சாதித்த முதல்வர்- குவியும் பாராட்டு
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு 3வது முறையாக முதல்வராகியுள்ள ஓ.பன்னீர் செல்வம் 60 நாட்களை கடந்து விட்டார். நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல இந்த 60 நாளில் பல சவால்களை சமாளித்து சாதித்துள்ளார் என்ற
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இக்கட்டான சூழ்நிலையில்தான் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார். இருமுறை அவர் முதல்வரானபோது அவருக்கு ஆலோசனை கூற கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இருந்தார்.
இப்போது ஜெயலலிதா உயிருடன் இல்லை. அவர் மரணமடைந்த சில மணி நேரங்களிலேயே இரவோடு இரவாக பதவியேற்றார். ஒபிஎஸ் முதல்வராக பதவியேற்று நாளையுடன் 60 நாட்களாகப் போகிறது. மூன்றாவது முறையாக பதவியேற்று 3வது மாதத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் ஒபிஎஸ்க்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
வந்து ஆடிய வர்தா
முதல்வராக பதவியேற்ற சில நாட்களிலேயே வர்தாவின் தாண்டவத்தில் தலைநகர் சென்னை சின்னாபின்னமானது. களத்தில் இறங்கி பணியை செய்தார் ஓபிஎஸ். ஒரே வாரத்தில் பிரச்சினையை தீர்த்து வைத்தார் என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டு பத்திரம் வாசிக்கின்றனர்.
எளிமையான முதல்வர்
முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தை அனைத்து கட்சித் தலைவர்களும் எளிதில் சந்தித்து பேச முடிகிறது. சட்டசபைக்கு காலையில் வந்தால் மாலை அவை முடிந்த பின்னரே கிளம்புகிறார். எதிர்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு தெளிவாகவும், பொறுமையாகவும் பதில் கூறுகிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு புன்னகை மாறாமல் பதிலளிக்கிறார், விமான நிலையத்தில் நேரமானாலும் நிருபர்களுக்கு நின்று நிதானமாக பதில் சொல்லிவிட்டே கிளம்புகிறார். சத்தமாக சார் என்று கூப்பிட்டாலும் திரும்பி பதில் சொல்கிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டம்
தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரிந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை திறம்பட கையாண்டார். பிரதமர் உடனான சந்திப்பு, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து அதை சட்டசபையில் நிரந்தரமாக நிறைவேற்றியது என இளைசுகளின் மனங்களில் நல்ல முதல்வர் என்று பாராட்டைப் பெற்றுள்ளார். எளிமை, பொறுமை கலந்த சவால்களை சமாளிக்கத் தெரிந்த முதல்வர் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
5 ஆண்டுகள் ஆள ஆதரவு
சட்டசபையில் எதிர்கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் பேசும் போது ஓ.பன்னீர் செல்வம் 5 ஆண்டுகள் முதல்வராக இருக்க திமுக ஆதரவு தரும் என்றார். அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை. எதிர்கட்சியினரே பாராட்டும் அளவிற்கு ஆட்சி செய்கிறார் ஒபிஎஸ் என்பது மட்டும் உண்மை.