இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கத்தான் மீண்டும் 'தர்ம யுத்தத்தை' தொடங்கும் ஓபிஎஸ்
மக்களிடத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவே மீண்டும் சசிகலா குடும்ப எதிர்ப்பு, மோடியின் தலையீடு என இன்னொரு தர்மயுத்தத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: மக்களிடத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவே மீண்டும் சசிகலா குடும்ப எதிர்ப்பு, மோடியின் தலையீடு என இன்னொரு தர்மயுத்தத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வர் பதவி வகித்த ஓபிஎஸ்-க்கு மக்களிடம் செல்வாக்கு இருந்தது. முதல்வர் பதவியை சசிகலா பறித்ததால் ஓபிஎஸ் தர்ம யுத்தத்தை தொடங்குவதாக அறிவித்தார்.
அப்போது மக்கள் செல்வாக்கு ஓபிஎஸ்-க்கு அமோகமாக இருந்தது. அதன்பின்னர் மீண்டும் ஈபிஎஸ் அணியுடன் இணைந்து துணை முதல்வரான நிலையில் மக்களின் செல்வாக்கை ஓபிஎஸ் இழக்க தொடங்கினார்.
அதிருப்தியில் ஆதரவாளர்கள்
அத்துடன் தம்மை நம்பி வந்த ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை பெற்றுத்தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
புதிய நிர்வாகிகள் நியமனம்
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளது. அத்துடன் நீக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவும் இருக்கின்றனர்.
திடீர் பேச்சு ஏன்?
இந்த இரண்டு சூழல்களையும் பயன்படுத்தி தமது இழந்த செல்வாக்கை மீட்க ஓபிஎஸ் விரும்புகிறார். அதனால்தான் பிரதமர் மோடி தலையீடு, சசிகலா குடும்பத்தின் நெருக்கடி என பல விஷயங்களை பட்டவர்த்தனமான போட்டு உடைக்கிறாராம் ஓபிஎஸ்.
ஈபிஎஸ் அணிக்கு செக்?
சசிகலா குடும்ப எதிர்ப்பை வலுவாக்குவதன் மூலம் சமூக ரீதியாகவும் தினகரன் பக்கம் அதிமுகவினர் செல்வதைத் தடுக்க முடியும் என கருதுகிறாராம் ஓபிஎஸ். அத்துடன் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் நிலையில் மேற்கு மாவட்ட லாபி தினகரன் தரப்புடன் கை கோர்ப்பதை தடுக்கும் வியூகமாகவும் இப்பேச்சுகளை ஓபிஎஸ் பேசுவதாகவும் கூறப்படுகிறது.