ஆர்.கே.நகரில் திமுகவுக்கும் யாருக்கும் கடும் போட்டி?.. ஒன்இந்தியா மின்னல் சர்வேயின் பரபர முடிவுகள்!
சென்னை: ஆர்.கே.நகரில் திமுகவுக்கும், ஓ.பி.எஸ். அணிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுவதாக ஒன்இந்தியா தமிழ் நடத்திய ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதியை அறிவித்து விட்டது தேர்தல் ஆணையம். ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன.
அதிமுக உடைந்து போய் விட்டதாலும், ஜெயலலிதா இல்லை என்பதாலும் அதிமுகவின் சிதறிக் கிடக்கும் வாக்குகளை அள்ளப் போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந் நிலையில் உங்களது வாக்கு எந்தக் கட்சிக்கு என்று நமது வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதில் கிடைத்த பதில்கள் செம சுவாரஸ்யமாக உள்ளன.
பரிதாப நிலையில் சசிகலா அதிமுக
ஆர்.கே.நகரில் எந்தக் கட்சி ஜெயிக்கும்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளோரிடையே சசிகலா குரூப் அதிமுக்கு சுத்தமாக ஆதரவு இல்லை. வெறும் 4.29சதவீதம் பேர்தான் அதாவது 286 பேர்தான் வாக்களித்துள்ளனர்.
ஓ.பி.எஸ். அதிமுக ஓஹோ!
அதேசமயம், ஓ.பி.எஸ். தலைமையிலான அதிமுகவுக்குத்தான் நல்ல ஆதரவு காணப்படுகிறது. அதாவது 32.88 சதவீதம் பேர் இந்த அணி ஜெயிக்கும் என்று கூறியுள்ளனர். இவர்களுக்குக் கிடைத்த வாக்குகள் 2190.
திமுக முதல் சாய்ஸ்
அதேசமயம், நமது வாசகர்களின் முதல் சாய்ஸ் திமுகதான். அந்த கட்சி வெல்லும் என்று 2826 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 42.43 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
வேற யாராவது ஜெயிக்கலாம்
வேறு யாரேனும் ஜெயிக்கக் கூடும் என்று கூறியிருப்போரும் கணிசமாக உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 20.39 சதவீதமாக உள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்தது.
கிட்டத்தட்ட திமுகவுக்கு நிகராக ஓ.பி.எஸ்.
இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்த்தால் கிட்டத்தட்ட திமுகவுக்கு பக்கத்தில் ஓ.பி.எஸ் அணி இருப்பது தெரிய வருகிறது. ஆர்.கே.நகர் அடிப்படையில் அதிமுகவின் கோட்டையாகும். வாக்குகள் பிரிந்திருந்தாலும் கூட அதை லாவகமாக தன் பக்கம் பெருமளவில் ஓ.பி.எஸ் அணி திருப்பி வைத்திருப்பதை உணர முடிகிறது.
திமுக நன்கு திட்டமிட வேண்டியது அவசியமாகும்.