அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் மரணம்.. தர்மபுரி செல்வாரா முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்?
சென்னை: தர்மபுரி அரசு மருத்துவமனையில் 12 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். அவர் இன்று பிற்பகலுக்கு மேல் தர்மபுரி செல்லக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பச்சிளங்குழந்தைகள் வார்டில், தீவிர சிகிச்சை பிரிவில் எடைகுறைவான மற்றும் மூச்சு திணறல், மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றன. இந்த வார்டில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றன. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறைப்பிரசவம், எடைக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்த மரணங்கள் நேர்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது இயற்கையானது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அங்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இல்லாதது, சிகிச்சையில் போதிய கண்காணிப்பு இல்லாததுதான் காரணம் என குழந்தைகளை இழந்த பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுவரை 12 குழந்தைகள் இறந்துள்ளனர். இதில் 8 பெண் குழந்தைகள் அடக்கமாகும். வார்டில் உள்ள 73 குழந்தைகளில் 54 குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், 16 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகள் இறப்பைத் தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்குநரக இயக்குநர் கீதாலட்சுமி நேற்று தர்மபுரி மருத்துவமனைக்கு வந்து முகாமிட்டார். அதேபோல் நேற்று முன்தினம் இரவு பொறுப்பேற்ற புதிய டீன் நாராயணபாபுவும் நேற்று பச்சிளம் குழந்தைகள் வார்டில் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் 30 இன்குபேட்டர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் சில இயங்காதது ஆய்வில் தெரியவந்தது. போதிய மருத்துவர்கள் இல்லை. மூச்சிறைப்பால் ஏற்படும் பாதிப்பை கண்டறிய குழந்தைகள் இதய நோய் நிபுணர் இல்லை என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று அவசர ஆலோசனையை மேற்கொண்டார். இதில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இன்று பிற்பகலுக்கு மேல் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தர்மபுரி செல்வார் என்றும் அங்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தைகளைப் பார்ப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.