ஜெயலலிதாவுடன் பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு- பதவியேற்பு குறித்து ஆலோசனை!!
சென்னை: அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று போயஸ் தோட்டத்தில் நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பது குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா கடந்த 4 நாட்களாக யாரையும் நேரில் சந்திக்கவில்லை. போயஸ் தோட்டத்துக்கு சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் 19 அமைச்சர்களுடன் இண்டர்காம் மூலமாக மட்டுமே ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
இதே போல் சட்ட வல்லுநர்கள் மற்றும் ஜோசியர்களுடனும் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்தே இன்று காலை வரும் 22-ந் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டிருந்தார்.
அதுவும் தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி 22-ந் தேதி காலை 7 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்திருப்பதன் மூலம் தாம் மீண்டும் பதவியேற்பதில் எந்த ஒரு தடங்கலும் நல்ல நேரம் கெட்ட நேரம் போன்றவற்றின் மூலமாகக் கூட வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதையே வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்ட அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் போயஸ் தோட்டம் சென்றார். அங்கு ஜெயலலிதாவை பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான பின்னர் ஜெயலலிதா- பன்னீர்செல்வம் இடையேயான முதலாவது நேரடி சந்திப்பு இது என்கிறது போயஸ் தோட்ட வட்டாரங்கள். இந்த சந்திப்பின் போது எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள், பன்னீர்செல்வம் ராஜினாமா, ஆளுநரை சந்திப்பது, மீண்டும் பதவியேற்பது ஆகியவை குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.