அதிமுக தேர்தல் அறிக்கையா? ஆளை விடுங்க சாமி என்று ஓடிய ஒபிஎஸ்...
சென்னை: நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயாருக்கு கோவை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைவியில் சிகிச்சை பெற்றுவரும் தன் தாயை சந்தித்து நலம் விசாரித்ததோடு பரிவோடு கவனித்து வருகிறார் ஓபிஎஸ்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள், 86, பித்தப்பையில் கற்கள் இருந்ததால் கணையத்தில் அலர்ஜி ஏற்பட்டு, தீவிர வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி தனது தாயாரை அனுமதித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
பழனியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அவருக்கு ஏற்கனவே நுரையீரல், இருதயத்தில் சில பிரச்னைகள் உள்ளதால், மருத்துவ கவனிப்பில் ஓரிரு நாள் வைத்து பின்னர் அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் கூறினர்.
தாயார் மீது அளவற்ற பாசம் கொண்ட ஓ.பி.எஸ், கடந்த வாரம் இரண்டு நாட்கள் தாயாருடன் தங்கி அவரை கவனித்துக்கொண்டார்.
இதனிடையே இன்ப அதிர்ச்சியாக கட்சித்தலைமையிடமிருந்து அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் அழைப்பு வர, ஓடோடிச்சென்று ஜெயலலிதாவை சந்தித்தார்.
அப்போது தன்னைப்பற்றி வரும் செய்திகளுக்கு சுமார் 45 நிமிடங்கள் அவர் விளக்கமளித்தாராம். இதையடுத்தே அவருக்கு மீண்டும் தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் ஒரு இடம் கிடைத்தது.
இந்நிலையில் நேற்று பழனியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பித்தப்பை கற்கள் அகற்றப்பட்டன. இதனால் சற்றே ரிலாக்ஸ் ஆன ஓபிஎஸ் தற்போது மீண்டும் கோவை சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தன் தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார்.
தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இன்னும் ஒரு நாள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து நாளை பழனியம்மாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். நாளை தனது அம்மாவை பன்னீர்செல்வம் விமானம் மூலம் சென்னை அழைத்து செல்ல உள்ளதாக தெரிகிறது.
இன்று கோவை வந்த ஓபிஎஸ்சிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். ஆனாலும் எதற்கும் பிடிகொடுக்காமல் வழக்கமான புன்னகையுடனே தலையாட்டியவாரே சென்றார்.
கட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தபடியே சென்றார் ஓபிஎஸ். கட்சியின் தற்போதைய நிலை, அம்மாவின் உடல்நிலை என செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
அதேபோல் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு வெளியே வந்த பன்னீர் செல்வத்தை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு, நடப்பு அரசியல் குறித்தும், அதிமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி கேட்க முயன்றனர். பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வேகமாக காரில் புறப்பட்டு சென்றார்.