கடும் கோபத்தில் ஜெ.?: அதிமுக மகளிர் மாநாட்டில் தலைகாட்டாத ஓபிஎஸ், நத்தம், பழனியப்பன்
சென்னை: உள்ளாட்சி அமைப்பில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, அதிமுகவின் மகளிர் அணி சார்பில் காஞ்சிபுரம் நத்தப் பேட்டை பகுதியில் நேற்று நடைபெற்ற மாநாட்டில், ஐவரணியைச் சேர்ந்த மூன்று முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.அதிமுகவில் இரண்டாம் இடத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வமும், மூன்றாம் இடத்தில் உள்ள நத்தம் விஸ்வநாதனும் ஓரங்கட்டப்படுவதாக கூறப்பட்ட நிலையில், பழனியப்பன் மீதும் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் மகளிர் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா அனுமதிக்கவில்லையாம்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிமுகவின் மகளிர் அணியின் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை பகுதியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழக அமைச்சர்கள் கோகுலஇந்திரா, வளர்மதி, வைத்தியலிங்கம், டி.கே.எம்.சின்னையா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். செயின்ட் ஜார்ஜ் கோட்டை வடிவிலான மின்விளக்கு அலங்காரம், பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கும் புகைப்பட பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன.
உள்ளாட்சி அமைப்பு
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, ''உள்ளாட்சி அமைப்பை பெண்களிடம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என, முதல்வர் ஜெயலலிதா, பெண்களிடம் கொடுத்துள்ளார் என்றார்.
பெண்களுக்கு உரிமை
சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி பேசும் போது, அதிமுகவின் அனைத்து பிரிவுகளிலும், ஆண்களுக்கு நிகராக, பெண்களுக்கும் உரிமை வழங்கியவர் ஜெயலலிதா தான், என்றார்.
தேமுதிக மாஜிக்கள்
தே.மு.தி.க., சார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அ.தி.மு.கவில் இணைந்தவர்கள், நேற்று அதிமுக மகளிர் அணி கூட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்களான சாந்தி, சுந்தர்ராஜன், பாண்டிய ராஜன், அருண் சுப்பிரமணியன் ஆகியோர் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். நடிகர் அருண்பாண்டியன் உட்பட மற்றவர்கள் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தனர்.
ரமணா பற்றிய பேச்சு
பதவியிலிருந்து விலகிய, முன்னாள் அமைச்சர் ரமணா பற்றி, தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியம் பேசியதால், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கடுப்பாகினர்; அவரும் பேச்சை குறைத்துக் கொண்டார்.
ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன்
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் அதிமுகவில் ஐவர் அணி தலைவர்களாக செல்வாக்குடன் திகழ்ந்தனர். இவர்களில் எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம் தவிர மற்ற மூவரும் மகளிர் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
சரிந்த செல்வாக்கு
ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதனாலேயே இவர்கள் நேற்றைய மாநாட்டில் பங்கேற்கவில்லையாம். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் சிலரின் பதவிகள் சமீபத்தில் பறிக்கப்பட்டன. மேலும், அமைச்சர் பழனியப்பனை, முதல்வர் அழைத்து, அவரது மாவட்டமான தர்மபுரியில், கட்சி செல்வாக்கு சரிந்துள்ளது எனக் கூறி, அவரை கண்டித்ததாக, தகவல் வெளியானது.
ஜெ. அனுமதியில்லை
ஐவரணியில் உள்ள வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமியுடன் வளர்மதி, மகளிரணி செயலாளரும் அமைச்சருமான கோகுல இந்திரா, அப்துல் ரகீம், சின்னையா, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். ஐவரணியில் இருந்த மூன்று தலைவர்கள் ஓரங்கட்டப்படுவது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெளியேறிய பெண்கள்
நேற்றைய கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள் அனைவரும், தேமுதிக மாநாடு மற்றும் திமுகவினரின் பேரணி பொதுக் கூட்டம் குறித்து பேசினார். எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை விஜயகாந்த் இழந்தது குறித்து சாடினர். இரவு நெருங்கியதும் வீட்டுக்கு திரும்புவதற்காக, பொதுக்கூட்ட வளாகத்தில் இருந்த பெண்கள் வெளியேறினர்.
போக்குவரத்து நெரிசல்
மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள், கூட்டத்தில் இருந்து யாரும் வெளியேற வேண்டாம். அனைவரையும் பத்திரமாக பேருந்துகளில் அனுப்பி வைக்கிறோம் என அவ்வப்போது வேண்டுகோளாக தெரிவித்தனர். ஆனால், கூட்டம் வெளியேறிவிட்டது. முன்னதாக இக் கூட்டத்தால் காஞ்சிபுரம்-வாலாஜாபாத் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், வாகனங்கள் வேறு வழியில் திருப்பிவிடப்பட்டன.