ராகு காலம் முடிந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன்
சென்னை : தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று வந்தனர். இருவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில், அமைச்சர்கள் இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐவரணியில் இருந்த ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. அமைச்சர்களின் ஆதரவாளர்கள் வரிசையாக கட்டம் கட்டப்பட்டனர். இருவரும் தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை என எதிலுமே பங்கேற்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தன்னிலை விளக்கம் அளித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கடும் எச்சரிக்கைக்குப் பின்னரே கட்சி செயல்பாடுகளில் ஈடுபட இருவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் செல்ல ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கு பின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தனர்.
இன்று காலை ராகு காலம் 10.30 மணிக்கு முடிவடைந்தவுடன் கட்சி அலுவலகத்திற்குள் கால் வைத்தனர். அதேநேரத்தில் ஐவரணியில் இருந்த மற்றொரு அமைச்சர் பழனியப்பனுக்கு தடை நீடிக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூட்டணி பற்றி பேச இன்று சிறிய கட்சியினர் வந்துள்ளனர். அவர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.வி. வேலுமணி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.