சசிகலா பற்றிய 90 சதவிகித ரகசியத்தை வெளியிடாமல் அரைத்தமாவையே அரைக்கும் ஒபிஎஸ்
சசிகலா பற்றிய 90 சதவிகித ரகசியத்தை வெளியிடாமல் ஓ.பன்னீர் செல்வம் அரைத்தமாவையே அரைப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஒ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு சசிகலா மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அப்போது தான் கூறியுள்ளது 10 சதவிகிதம் மட்டுமே என்றும் மீதி 90 சதவிகிதம் இருப்பதாக கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் அந்த 90 சதவிகித ரகசியத்தை இதுவரை வெளிப்படுத்தவேயில்லை. பழைய குற்றச்சாட்டுக்களையே முன் வைத்து வருகிறார். இதனை விமர்சித்து மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த ஓ.பன்னீர்செல்வம், அதன்பின்பு சசிகலா பற்றி 10 சதவீத உண்மைகளை மட்டுமே கூறியுள்ளேன் என்றார். அப்படியானால் சசிகலா குறித்த 90 சதவீதம் ரகசியங்களை ஓபிஎஸ் வெளியிடாததன் காரணம் என்ன? ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி என்றால் முழு ரகசியத்தையும் ஓபிஎஸ் வெளியிட வேண்டும் என்று கேட்டார்.
ஓபிஎஸ் பதில்
இதற்கு பதிலளித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், முதல்வராகும் தமது ஆசையை சசிகலா வெளிப்படுத்திய பிறகுதான் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க தாம் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றார்.
திமுக பலவீனம்
ஜெயலலிதா உடல்நலம் குறித்து மருத்துவமனை தெரிவித்த தகவல்களை நம்பினோம் என்று கூறிய ஒ.பன்னீர் செல்வம் கூறினார். மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதன் மூலம் தி.மு.க.வின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.
வெளிநாட்டு சிகிச்சை
ஜெயலலிதா மரணம் குறித்து மக்களுக்கு தீராத சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால்தான் விசாரணை கமிஷனுக்கு ஆணையிட்டேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாள்களில் தம்பிதுரையை அழைத்து அப்போலோவில் போதுமான சிகிச்சை வழங்கப்படுகிறதா எனத் தெரியவில்லை. எனவே ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்க்கலாம். இது குறித்து சசிகலா குடும்பத்திடம் பேசுங்கள் என்றேன்.
தடையாக இல்லை
தம்பிதுரை சசிகலா குடும்பத்தினருடன் இது குறித்து பேசிவிட்டு, அமெரிக்கா வேண்டாம். இங்கு அளிக்கும் சிகிச்சையே போதுமானது என்று என்னிடம் வந்து தெரிவித்தார். முக ஸ்டாலின் கூறுவது போன்று ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சைக்கு நான் தடையாக நிற்கவில்லை என்றார்.
90 சதவிகித கெடுதல்கள்
தொடர்ந்து பேசிய அவர் சசிகலா குடும்பத்தினர் தனக்கு 100 சதவிகிதம் கெடுதல் செய்திருப்பதாகவும், அவற்றில் 10 சதவிகிதம் மட்டுமே வெளியே கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். மீதமுள்ள 90 சதவிகித கெடுதல்களை உண்மைகளை வெளியே கூறவில்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அந்த மீதமுள்ள 90 சதவிகித உண்மைகளை வெளியே சொன்னால்தானே நடந்தது என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெரியவரும் மிஸ்டர் ஓபிஎஸ்.