ஆர்.கே. நகரில் வெற்றி எங்களுக்கே... மல்லுக்கட்டும் சசி, ஓபிஎஸ் அணி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி எங்கள் பக்கம்தான் இருக்கிறது என்று சசி அணி வேட்பாளர் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனும் கூறி வருகின்றனர்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தான்தான் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று டிடிவி தினகரன் கூறி வருகிறார். வெற்றி தனக்குத்தான் கிடைக்கும் என்றும் சசிகலா அணியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஒபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன், தான் எம்ஜிஆரின் ரசிகர் என்றும், மக்கள் ஆதரவு ஓபிஎஸ் அணிக்கு இருப்பதால் வெற்றி வாய்ப்பு தங்கள் பக்கம் இருக்கிறது என்றும் கூறி வருகிறார்.
ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. சசிகலா அணி சார்பில் வேட்பாளராக டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனமும் களத்தில் இருக்கிறார்.
திமுக, பாஜக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி, தீபா என இடைத்தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் போட்டியிடுகிறது.
எம்ஜிஆர் ரசிகன்
ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். மனுதாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு வெற்றி வாய்ப்பு திடமாக இருக்கிறது என்றார். தான் எம்ஜிஆர் ரசிகர் என்றும் கூறினார். வெற்றி பெற்ற பின்னர் கட்சியையும், ஆட்சியையும் மீட்பேன் என்று கூறியுள்ளார்.
குடும்ப ஆட்சியை ஒழிப்பேன்
சசிகலா குடும்ப அரசியலை ஒழிப்பேன் என்றும் மதுசூதனன் கூறினார். திமுக குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டவே அதிமுகவை தொடங்கினார் எம்ஜிஆர். அதே போல சசிகலா குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவேன் என்றார்.
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டறிவதே தங்களின் லட்சியம் என்று கூறிய மதுசூதனன், ஓபிஎஸ் அணியின் பக்கமே மக்கள் இருப்பதாகவும், வெற்றி வாய்ப்பு தங்கள் அணிக்கே இருக்கிறது என்றும் கூறினார்.
எந்த சின்னத்திலும் ஜெயிப்பேன்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசி அணி வேட்பாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை முடக்கப்பட்டது தற்காலிகமானதே என்றார். எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் ஜெயலலிதா வேட்பாளராகிய தனக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக தொண்டர்களின் மனநிலை
அதிமுக என்ற கட்சியின் பெயர் சசிகலா, ஓபிஎஸ் அணிகளின் கட்சிகளின் பெயர்களுக்கு பின்னால் உள்ளது. ஆனால் தொண்டர்களின் மனதில் நிறைந்துள்ள இரட்டை இலை முடக்கப்பட்டு விட்டது. இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்களின் வாக்கு ஓபிஎஸ் அணியில் உள்ள மதுசூதனனுக்கா, சசிகலா அணியின் டிடிவி தினகரனுக்கா என்பதே கேள்வியாக உள்ளது. கட்சி தொண்டர்களின் வாக்குகள் தவிர நடுநிலை வாக்காளர்களின் வாக்குகளும் கிடைத்தால் மட்டுமே இடைத்தேர்தலில் வெற்றி உறுதியாகும். சசிகலா, ஓபிஎஸ் மல்லுக்கட்டுக்கு நடுவே தீபாவும் போட்டியில் இருப்பதால் அதிமுக வாக்குகள் சிதறிப் போகும் நிலையே உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.