எனக்கா மனநிலை பாதிப்பு?... தினகரன்தான் லூசு... ஓபிஎஸ் கடும் தாக்கு
வேலூர்: எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறும் டிடிவி தினகரன்தான் லூசு போல் செயல்படுகிறார் என்று வேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சனம் செய்தார்.
தற்போது அதிமுகவுக்கு அமமுகவின் தினகரன் கடும் டஃப் கொடுத்து வருகிறார். முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை தினகரனை தாக்கி பேசுவதும் அதற்கு தினகரன் பதில் அளிப்பதும் சமீபகாலமாக சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்ட அதிமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.
அதிமுக உண்மை தொண்டர்கள்
அப்போது அவர் பேசுகையில், பொதுவாக ஏழரை ஆண்டுகள் சனி இருக்கும். ஆனால், அதிமுகவை 30 ஆண்டுகளாக ஒரு குடும்ப சனி ஆட்டி படைத்து வந்தது. டிடிவி தினகரனை சுற்றித்தான் பதவி, பணம், துரோகம் நிறைந்துள்ளது. எங்கள் பக்கம் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் உள்ளனர்.
கட்சி கலைந்து விட
ஜெயலலிதா கொண்டு வந்த ஆட்சி, அந்த குடும்பத்தினரிடம் செல்லக்கூடாது என்பதற்காகத்தான் நான், தர்மயுத்தத்தையே தொடங்கினேன். ஆனால் ஆட்சி கலைந்து விட நான் காரணமாக இருக்கக் கூடாது என்று நினைத்தேன்.
கட்சி தொடங்கி...
நான் முதல்வராக இருந்தபோது அதனை தக்க வைத்திருக்க முடியும். ஆனால் அந்த பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. தற்போது அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு கட்சி தொடங்கி வருகின்றனர்.
மக்களுக்கு தெரியும்
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ₹20 நோட்டுகள் செல்லாது. ஏற்கெனவே ஆர்.கே.நகர் தொகுதியில் கொடுத்த ₹20 நோட்டு செல்லாதது மக்களுக்கு தெரியும்.
தினகரன் லூசு
எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது என்று தினகரன் கூறுகிறார். ஆனால், அவர் தான் லூசாக இருக்கிறார். தமிழக முதல்வராக டிடிவி தினகரன் பகல் கனவு காண்கிறார். அதனை நாங்கள் தவிடுபொடியாக்குவோம் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.