காவிரி குறித்து பேச கர்நாடக முதல்வர் நேரம் ஒதுக்கவில்லை... துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
காவிரி விவகாரம் குறித்து பேச கர்நாடக முதல்வர் நேரம் ஒதுக்கவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: காவிரி நீர் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரம் ஒதுக்கவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
காவிரியில் இருந்து ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசோ வெறும் 111 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துள்ளது. மீதமுள்ள 82 டிஎம்சி நீரை திறந்து விட கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக நாள் மற்றும் நேரம் ஒதுக்கக் கோரி கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலாளருக்கு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
ஆனால் இதுநாள் வரை நேரம் ஒதுக்குவது குறித்து கர்நாடக அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுக தமிழக அரசு கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில் , காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து பேச கர்நாடக முதல்வர் நேரம் ஒதுக்கவில்லை என்றார்.