தமிழக மக்களிடம் இருந்து அதிமுகவை பிரிக்க முடியாது... ஓ.பி.எஸ். பேச்சு
சென்னை: தமிழக மக்களிடம் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை யாராலும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் சரிபட்டு வரமாட்டார் என்றும், அவரை நம்பி கருணாநிதி உயிருடன் இருந்தவரை எந்தப் பதவியும் தரவில்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை போரூரை அடுத்த அய்யப்பந்தாங்கலில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவுதின பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார்.
வெமுலாவின் தாயார்.. அடித்து கொல்லப்பட்ட ஜூனைத் அம்மா.. 3 பாட்டிகள்.. டெல்லியில் அசத்தல் கொடியேற்றம்!
பொதுக்கூட்டம்
அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகள் நினைவுதினப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அய்யப்பந்தாங்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர். அப்போது பேசிய ஓ.பி.எஸ். ஸ்டாலினை கலாய்த்தும், அதிமுக அரசின் சாதனைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
கலாய்ப்பு
சினிமா படத்தில் இடம்பெறும் வடிவேலின் நகைச்சுவை காட்சியில் இடம்பெறும் வசனத்தை போல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மேலும், அவரால் முதலமைச்சராக ஆக முடியாது என்றும், உயிருடன் இருந்த வரை கருணாநிதியே ஸ்டாலின் மீது நம்பிக்கை வைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
முதல் இடம்
கல்வித்துறையை பொறுத்தவரை தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்த ஓ.பி.எஸ்., ஒரே ஆண்டில் 9 மருத்துவகல்லூரிகள் தொடங்கிய பெருமை அதிமுக அரசையே சேரும் எனக் கூறினார். தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ வழி செய்தவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்றும் அவர்களின் வழியில் அதிமுக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஒன்றரை கோடி
எம்.ஜி.ஆர்.மறைவின் போது அதிமுகவில் 16 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததாகவும், அதன் பிறகு கட்சிக்கு தலைமைதாங்கிய ஜெயலலிதா கடுமையாக உழைத்ததன் பயனாக 29 ஆண்டுகளில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்ந்ததாகவும் ஓ.பி.எஸ்.தெரிவித்தார். செம்மொழி மாநாடு நடத்தி அரசு நிதியை வீண் செய்தவர்கள் தான் திமுகவினர் என விமர்சித்தார்.