நலம்தானா.. நலம்தானா.. உடலும் உள்ளமும் நலம்தானா.. பாட்டு பாடி அசத்திய முதல்வர் ஓபிஎஸ்
தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களுக்கு அரசு விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பாட்டுப்பாடி அசத்தினார்.
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு இன்று காலை விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் திரைப்பட பாடலைப்பாடிட முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அசத்தினார்.
இந்த விழாவில், திருவள்ளுவர் விருது புலவர் பா. வீரமணிக்கும், தந்தை பெரியார் விருது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கர் விருது மருத்துவர் இரா. துரைசாமிக்கும் மேலும், அண்ணா விருது கவிஞர் கூரம் மு.துரைக்கும், காமராஜர் விருது டி. நீலகண்டனுக்கும் பாரதியார் விருது முனைவர் ச. கணபதிராமனுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் கோ. பாரதிக்கும், திரு.வி.க. விருது போராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும் கி. ஆ.பெ. விஸ்வநாதன் விருது மீனாட்சி முருகரத்தினத்திற்கும் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் விருதுகளை வழங்கி பேசினார்.
அப்போது, மறைந்த ஜெயலலிதாவைப் பற்றிய உருக்கமாக பேசிய ஓபிஎஸ், தமிழர்கள், தமிழ்மொழி வளர்ச்சி குறித்து பேசினார். பேச்சின் இடையில் நலம்தானா.. நலம்தானா.. உடலும் உள்ளமும் நலம்தானா.. என்று நடிகர்கள் சிவாஜி, பத்மினி நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் பாடலைப் பாடி அசத்தினார்.
ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை விருது பெற்ற ஒவ்வொரு தமிழ் அறிஞர்களுக்கும் வழங்கப்பட்டது.