தானமாக தருவதாக கூறிய கிணற்றை வேறு நபருக்கு விற்ற ஓபிஎஸ்.. கிராம மக்கள் கொந்தளிப்பு!
பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய கிணற்றை தனிநபருக்கு விற்பனை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி: பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய கிணற்றை தனிநபருக்கு அவர் விற்பனை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான நிலத்தில் பிரமாண்ட கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த கிணறுகளால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து இந்தக் கிணற்றை ஊர்மக்களுக்கு இலவசமாக வழங்கப் போவதாகப் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். ஆனால் சொன்னபடி கிணற்றை வழங்காமல் லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு கிணற்றையும் நிலத்தையும் ஓபிஎஸ் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து லெட்சுமிபுரத்தில் பொதுமக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் லெட்சுமிபுரத்தில் பதற்றம் நிலவுகிறது.