ஜெ. மரணத்தில் நீதி கேட்டு… இன்று சுற்றுப் பயணம் தொடங்குகிறார் ஓபிஎஸ்… கிடுகிடுக்கும் இபிஎஸ் டீம்
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு இன்று காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை ஓபிஎஸ் தொடங்குகிறார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கிறார்.
காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் ஓபிஎஸ் கன்னியாகுமரியில் பயணத்தை முடிக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகளும் இணைந்து விடும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. மேலும், இரு அணியினரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலும் உருவாகவில்லை.
மாறி மாறி…
ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனையை ஏற்க பழனிசாமி அணியினர் தயாராக இல்லை. அதே நேரத்தில் நிபந்தனை எதுவும் இன்றி பேச தயாராக இல்லை என்று ஓபிஎஸ் அணியினர் கூறி விட்டனர். இதுபோன்று இரு அணியினரும் மாறி மாறி பேசி வருவதால் இழுபறி நீடித்து வருகிறது.
சுற்றுப்பயணம்
அணிகள் இணைப்புக்கான சாத்தியம் தற்போது இல்லாத சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார். இந்தப் பயணத்தின் போது மாநிலம் முழுவதும் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார் ஓபிஎஸ்.
32 மாவட்டங்கள்
காஞ்சிபுரத்தில் தொடங்கும் இந்த சுற்றுப்பயணம் கன்னியாகுமரி வரையில் முடிகிறது. அப்போது, 32 மாவட்டங்களுக்கும் சென்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களை ஓபிஎஸ் சந்திக்கிறார்.
ஆலோசனை
இந்தப் பயணத்தின் போது, ஜூலை மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்தும் அதில் போட்டியிடுவது பற்றியும் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜெ.மரணம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கான நீதி விசாரணை கேட்டு சுற்றுப் பயணம் என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. என்றாலும் இரு அணிகளும் சேரும் நேரத்தில் தொடங்கும் இந்தச் சுற்றுப் பயணம் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.