கோயம்பேடு மார்க்கெட்டில் துணை முதல்வர் ஓபிஎஸ் திடீர் ஆய்வு!
கோயம்பேடு மார்க்கெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோயம்பேட்டில் காய், கனி, பூ ஆகியவற்றுக்கென தனி மார்க்கெட் உள்ளது. இங்கு மொத்த வியாபாரிகளும், சிறு வியாபாரிகளும் வந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். மேலும் வீட்டில் நடைபெறும் நல்லது, கெட்டது என்று எல்லாவற்றுக்கும் மக்கள் காய், கனி, பூக்களை வாங்க குவிவது கோயம்பேடு சந்தைக்குத்தான்.
வியாபாரிகள் மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு காய்கறிகளை வாங்கி செல்வர். வீடுகளின் அருகே காய்களின் விலையை ஒப்பிடும் போது கோயம்பேட்டில் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று திடீரென ஆய்வு செய்ய வந்தார். அப்போது வியாபாரிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வந்துள்ளேன்.
இங்கு விரைவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்பு மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு நடத்தினேன் என்றார் துணை முதல்வர் ஓபிஎஸ். புகார்களின் அடிப்படையில் துணை முதல்வர் ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.