செய்யாறு அதிமுக எம்.எல்.ஏவை தாக்க முயற்சி… சசிகலா- ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பயங்கர மோதல்
சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய செய்யாறு அதிமுக எம்எல்ஏவை தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் செய்யாறில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்யாறு: கடந்த 18ம் தேதி சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்துவிட்டு ஊர் திரும்பினார் செய்யாறு எம்எல்ஏ மோகன். அவருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 18ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு அதிமுகவின் 122 எம்எல்ஏக்கள் வாக்களித்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக உறுதி படுத்தினார்கள்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்கள் மீது தொகுதி மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் ஊருக்குள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் செய்யாறு எம்எல்ஏ மோகன் தனது சொந்த தொகுதிக்கு திரும்பினார்.
எம்எல்ஏ ஊர் திரும்பிவிட்டதை தெரிந்து கொண்ட மக்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்று எம்எல்ஏவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அங்கு வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களும் எம்எல்ஏவை எதிர்த்து குரல் எழுப்பினார்கள். இதனை கடுமையாக சசிகலா ஆதரவாளர்கள் எதிர்த்தனர். இதனால் சசிகலா ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிதடி என கைகலப்பு ஏற்பட்டது.
இந்த மோதலின் போது செய்யாறு எம்எல்ஏ மோகனை தாக்க ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முயற்சி செய்தனர். இதனால் செய்யாறு பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.