ஆர்.கே.நகர் தேர்தலில் ஓ.பி.எஸ் அணி சுறுசுறுப்பு.. 14 வட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, ஓபிஎஸ் அணி அந்த தொகுதியில் உள்ள 7 வார்டுகளுக்கும் முக்கிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, ஓபிஎஸ் அணி அந்த தொகுதியில் உள்ள 7 வார்டுகளுக்கும் முக்கிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. மேலும் இதை 14 வட்டங்களாக பிரித்து தேர்தல் பொறுப்பாளர்கள் ஓபிஎஸ் அணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி ஆர்.கே. நகர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த மாதம் 12ம் தேதி ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி என மூன்றாக பிளவுப்பட்டு ஆர். கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் திமுக, தேமுதிக, பாஜக, ஆகிய கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
தினகரன் - ஓபிஎஸ் இடையே போட்டி
எனினும் ஆர்.கே.நகரில் சசிகலா அணியின் டிடிவி தினகரனுக்கும் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனுக்கும் தான் கடுமையான போட்டி நிலவுகிறது. ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனன் ஏற்கனவே கடந்த 1991ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றவர் . மேலும் அவருடைய சொந்தவூரும் ஆர்.கே. நகர் தான்.
தேர்தல் களத்தில் பரபரப்பு
இதனால் இந்த இரண்டு அணியினரிடையே கடுமையான போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஆர்.கே நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளதால் தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது.
14 வட்டங்களில் பொறுப்பாளர்கள்
இந்நிலையில் தேர்தல் களத்தில் அதிரடியாக இறங்கியுள்ள ஓபிஎஸ் அணி, 7 ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் முக்கிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இதில் 14 வட்டமாக பிரித்து தேர்தல் பணிகளை கண்காணிக்கவும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகரில் 38, 39, 40, 41, 42, 43, 47 என 7 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளை இரண்டாக பிரித்து தேர்தல் பணியை எளிமையாக செய்ய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொறுப்பாளர்கள் யார் ?
பொன்னையன், பி.எச்.பாண்டியன், செம்மலை, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், ஜே.சி.டி.பிரபாகர், மாபா. பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், செங்கை ராமச்சந்திரன், கே.எஸ்.பழனிசாமி ஆகியோரை ஆர்.கே. நகரின் தேர்தல் பொறுப்பாளர்களாக ஓபிஎஸ் அணியினர் நியமித்துள்ளனர்.
பிரசாரம் தொடங்கும் நாள்
இவர்கள் ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு உடனடியாக தங்களது பிரசாரத்தை தொடங்குகிறார்கள். பிரசாரத்தில் ஈடுபடும் பொறுப்பாளர்களுக்கு பொறுப்புகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் விரைவில் ஆர்.கே நகர் தொகுதி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.