லட்சிய பாதையை விட்டு லட்சங்களை நோக்கி சென்றால் அரசியலில் அனாதைதான்... ஓபிஎஸ் எச்சரிக்கை
ஜெயலலிதா வழியில் லட்சிய பாதையில் செல்லும் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று எடப்பாடி கோஷ்டிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
சேலம்: ஜெயலலிதா வழியில் லட்சிய பாதையில் செல்லாமல் போனால் மக்கள் உங்களை அரசியல் அனாதைகளாக்கிவிடுவார்கள் என்று எடப்பாடி கோஷ்டிக்கு ஓ.பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில் எம்ஜிஆர் 100-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் அணியினர் நேற்று நிகழ்த்தினர். இதில் செம்மலை எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை கடந்த 1972-ஆம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கினார். 17 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அந்த இயக்கத்தில் ஜெயலலிதாவின் அயராது உழைப்பினால் தற்போது ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர்.
ஆனால் அவர் மறைந்த பிறகு, அதிமுக ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது. அதை மீட்டெடுப்பதற்காக தர்ம யுத்தம் தொடங்கியுள்ளோம். இதில் விரைவில் வெற்றி பெறுவோம். உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சட்டசபை தேர்தல் வரலாம். எடப்பாடி அணியினர் செல்வது சரியான பாதை அல்ல.
ஜெயலலிதாவின் லட்சிய பாதையில் செல்லும் எங்களுடன் இணைந்தால் மக்கள் உங்களை மதிப்பர். இல்லையெனில், அரசியலில் அனாதைகளாக்கப்படுவீர்கள் என்று தெரிவித்தார்.