டிமாண்ட் என்னென்ன… பேச்சுவார்த்தை குழுவில் யார் யார்… ஓபிஎஸ் டீம் அவசர ஆலோசனை
தினகரன் குடும்பம் ஒதுக்கப்பட்ட பின்னர் அதிமுக அம்மா அணியுடன் இணைவது தொடர்பாக ஓபிஎஸ் அணியினர் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். அதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது,
சென்னை : ஓபிஎஸ் அணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக அம்மா அணியுடன் இணைவது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கட்சியின் நலன் கருதி அதிமுக அம்மா கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்திருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பலரும் அந்தக் கருத்தை வெளியிட்டனர்.
இதனையடுத்து ஓபிஎஸ் அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் விரைவில் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஆலோசனைக் கூட்டம்
இது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று காலை 10 மணி அளவில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் எம்பிக்கள் மைத்ரேயன், ராஜேந்திரன், வனரோஜா, எம்எல்ஏக்கள் செம்மலை, ஆறுகுட்டி மற்றும் பி.எச். பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
யார் யார்?
எடப்பாடி பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் போது யார் யார் கலந்து கொள்ளப் போவது, அதற்கான குழு அமைப்பது, அந்தக் குழுவில் எத்தனைப் பேர் இடம் பெறுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
என்ன டிமாண்ட்?
அதே போன்று, எடப்பாடி பழனிச்சாமி அணியினர் என்னென்ன விட்டுக் கொடுக்க வேண்டும், ஓபிஎஸ் அணியினர் என்னென்ன பதவிகளை கேட்டுப் பெற வேண்டும் என்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.
அம்மா அணி குழு
எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் பேச்சுவார்த்தைக்கான குழு அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. எனவே, அந்த அணியினர் இன்று பேச்சுவார்த்தைக் குழு பற்றி அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முக்கிய அறிவிப்பு
ஓபிஎஸ் அணியினரின் ஆலோசனைக்கு பின்னர் பேச்சுவார்த்தைக் குழு அறிவிக்கப்படும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணியினரும் தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.