ஜெ. மரணத்தில் உள்ள மர்மம் என்ன… விசாரிக்கக் கோரி இன்று உண்ணாவிரதம்.. சாதிப்பாரா ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணை வேண்டும் என்று கோரி இன்று 32 இடங்களில் ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓ.பன்னீ்ர் செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்ற வந்த ஜெயலலிதா, திடீர் மாரடைப்பின் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அனைத்து தரப்பினரும் கூறி வந்தனர். ஓபிஎஸ் அணியில் உள்ள பிச்.எச். பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் பகிரங்கமாக பல சந்தேகங்கள் எழுப்பினார்கள்.
தியான ஓபிஎஸ்
சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஓபிஎஸ் மெரினாவில் தியானம் இருந்து விட்டு சசிகலா பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
பரபர பிரஸ் மீட்டு
ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் பேசி வர, அதிர்ந்து போன சசிகலா தரப்பினர் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் மற்றும் அப்பல்லோ மருத்துவவர்களை வைத்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்கள். பின்னர், எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் அறிக்கையை வெளியிட்டார்கள். இப்படி பல வேலைகளை சசிகலா தரப்பு செய்தாலும் பயன் ஒன்றுமில்லை.
ஜனாதிபதியிடம் மனு
இதனிடையே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கடந்த வாரம் மனு அளித்தனர்.
உண்ணாவிரதம்
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளி கொண்டு வர நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி மகளிர் தினமான இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
32 இடங்களில்..
சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்கள் என மொத்தம் 32 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கான அனுமதியை உரிய முறையில் போலீசாரிடம் ஓபிஎஸ் அணியினர் பெற்றுள்ளனர்.
ஆதரவு எப்படி?
சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். சென்னை தலைநகரம் என்பதால் ஓபிஎஸ் அணியினர் தங்களது பலத்தை காட்ட வேண்டிய அவசியத்தில் உள்ளனர்.