கோப்புகளில் கையெழுத்து போடுவது மட்டும்தான் சாதனையா? எடப்பாடி மீது பாயும் செம்மலை
அரசுக் கோப்புகளில் மட்டும் கையெழுத்துப் போடுவதையே சாதனையாகக் கருதுகிறார் முதல்வர் பழனிச்சாமி என்று மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. செம்மலை கூறியுள்ளார்.
சேலம்: ஓபிஎஸ் அணியின் மூத்த நிர்வாகியும், மேட்டூர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செம்மலை எம்எல்ஏ சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர்,'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசி உள்ளார். எனது பதவி காலத்தில், சுகாதாரத்துறையிலும்,கல்வி துறையிலும் என்னென்ன சாதிக்கப்பட்டது என்பது பழனிச்சாமிக்குத் தெரியவில்லை. நாட்டு மக்களின் நலன் கருதி, இவர் முதல்வர் ஆன பிறகு செய்த சாதனைகளை சொல்லட்டும்" என்று கொந்தளித்தார் செம்மலை.
மேலும் அவர் கூறுகையில், "இன்று தமிழக மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விதிவிலக்கு வேண்டி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு இவரால் மத்திய அரசின் ஒப்புதல் பெற முடிந்ததா? இல்லையே.
முதல்வரின் வழக்கமான கோப்புகளில் ஆயிரக்கணக்கான கையெழுத்திட்டு இருக்கிறேன் என்று சொல்வது மட்டும் ஒரு முதல்வருக்கு சாதனை என்று ஆகி விடாது.
விவசாயிகள் பிரச்சனை, தமிழகம் முழுக்க தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை என்று நிறைய தீர்வு காணவேண்டிய பிரச்சனைகள் உள்ளன. மேட்டூர் அணை வறண்டு போய் இருக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற வேண்டிய தலையாய கடமை.
மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகமே திரண்டுள்ளது.எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன.இது போன்ற மக்கள் நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு இவர் கண்ட தீர்வுதான் என்ன" என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார் எம்.எல்.ஏ. செம்மலை.