இரட்டை இலைக்காக.. இரு அணிகளும் இணைவதுதான் நல்லது: அமைச்சர் சி வி சண்முகம்
இரட்டை இலைக்காகவும், கட்சிக்காகவும் இரு அணிகளும் இணைவதுதான் நல்லது என்று அமைச்சர் சி வி சண்முகம் கூறியுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அணி இணைவது வரவேற்பிற்குரியது என்று தினகரனும், சசிகலா குடும்பம் கட்சியை விட்டு வெளியேறினாலே இணைவது சாத்தியம் என்று ஓபிஎஸ்ஸும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரு அணிகளும் இணைவது அவசியம் என்றும் அமைச்சர் சி வி சண்முகம் கூறியுள்ளார்.
சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் இணைவதற்கான சூழல் உருவாகியுள்ளதால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி ஓபிஎஸ் அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் இரு அணிகளும் இணைவது குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் சசிகலா அணியினர் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேசுவோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
முரண்பாடு
இந்நிலையில், தங்களது அணியுடன் ஓபிஎஸ் அணி இணைந்தால் வரவேற்போம் என்று தினகரன் கூறியதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதே நேரத்தில் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், சசிகலா குடும்பம் கட்சியில் இருக்கும் வரை இணைப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை என்று தெரிவித்தார்.
மீண்டும் வேதாளம்
இதனைத் தொடர்ந்து, டிடிவி தினகரனை சந்தித்து பேசிய எம்எல்ஏ வெற்றிவேல் ஓபிஎஸ் மீண்டும் பழைய பல்லவியே பாடுகிறார் என்றும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது என்றும் ஓபிஎஸ்ஸுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.
கட்சியின் நலனுக்காக..
இந்நிலையில், கட்சியின் நலனுக்காகவும் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஓபிஎஸ் அணியும் சசிகலா அணியும் இணைய வேண்டும் என்று அமைச்சர் சி வி சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
இரு அணிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அதிமுக அம்மா கட்சியின் குழுவுடன் ஓபிஎஸ் பேசிய பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சி வி சண்முகம் கூறியுள்ளார்.