அணிகள் இணைப்பு.. ஓபிஎஸ் நாளையும் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பார்: நிர்மலா பெரியசாமி #AIADMKMerger
சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், 4 மணி நேரத்திற்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன.
அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதேபோன்று முதல்வர் பழனிசாமி, முக்கிய அமைச்சர்களுடன் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
4 மணிநேரம் இப்படி நடைபெற்ற ஆலோசனை கூட்டம் இரவு 9.15 மணியளவில் நிறைவடைந்தது. இதன்பிறகு ஓ.பி.எஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய அவர் ஆதரவு மூத்த நிர்வாகிகளான பி.ஹெச்.பாண்டியன், பொன்னையன், மதுசூதனன் ஆகியோர் அணிகள் இணைப்பு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், அதுகுறித்து பன்னீர்செல்வம்தான் முடிவெடுத்து அறிவிப்பார் எனவும் கூறி கலைந்து சென்றனர்.
இரவு சுமார் 10.20 மணியளவில் ஆலோசனை கூட்டத்திலிருந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர் நிர்மலா பெரியசாமி வெளியே வந்தார். நிருபர்கள் அவரிடம் அதிமுக இணைப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில், பன்னீர்செல்வம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள தலைவர் என்பதை இந்த ஆலோசனை கூட்டம் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.
ஒவ்வொருவரிடமும் இணைப்பு குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். இறுதி முடிவை பன்னீர்செல்வம்தான் அறிவிப்பார். என்னால் கூற முடியாது. நாளையும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு அவர் ஊடகங்களிடம் தகவல் தெரிவிப்பார். அதுவரை ஊடகங்கள் உங்கள் பிரேக்கிங் செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்புங்கள் என கூறி கிளம்பினார்