கடும் எதிர்ப்பு எதிரொலி.. சிவாஜி மணிமண்டபத்தை ஓபிஎஸ் திறக்கிறார் - பிரபு மகிழ்ச்சி
சிவாஜி மணிமண்டபத்தினை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிப்பதாக பிரபு கூறியுள்ளார்.
சென்னை: அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் அறிவிப்பு திருப்தி அளிப்பதாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் பிரபு கூறியுள்ளார். முதல்வரிடம் தொலைபேசியில் பேசியதாகவும் பிரபு கூறியுள்ளார்.
மிழக அரசு சார்பில் சென்னை அடையாறு மேம்பாலம் அருகே சிவாஜி மணிமண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழா அவரது பிறந்தநாளான அக்டோபர் 1ம் தேதி நடக்கிறது.
மணிமண்டப திறப்பு விழா
மணிமண்டப விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, சிவாஜியின் இளைய மகனும் நடிகருமான பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் சார்பில் நேற்று தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
சிவாஜி ஆத்மாவுக்கு நியாயம்
அதில், அப்பா நினைவு மணிமண்டபம் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம். அவர் உயிரோடு இருந்திருந்தால் விழாவுக்கு தலைமை ஏற்று அவரே மண்டபத்தை திறந்து வைத்து சிவாஜி ஆத்மாவுக்கு நியாயம் செய்திருப்பார்.
சிறிய விழாவாக நடத்தலமா?
தமிழக அரசே சிவாஜிக்கு நினைவு மண்டபம் கட்டியிருப்பது எங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும் அதேவேளையில் அதன் திறப்பு விழாவில் முதல்வரோ அல்லது துணை முதல்வரோ பங்கேற்காமல் இதையொரு சிறிய விழாவாக நடத்துவது சிவாஜியை அவமரியாதை செய்யும் செயலாக கருதுகிறோம்.
மறுபரிசீலனை செய்க
தனது படங்கள் மூலம் தமிழ் கலாசாரத்துக்கும், உயர்ந்த தமிழ்மொழிக்கும் நிறையவே சேவையாற்றியிருக்கிறார் சிவாஜி. எனவே தயவு செய்து இந்த விழாவில் முதல்வர் மற்றும் உங்களது அரசு அதிகாரிகள் அனைவரையும் சிறப்பு வாய்ந்த தமிழ் நடிகரின் நினைவு மண்டப திறப்பு விழாவில் பங்கேற்க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எங்கள் குடும்பம் மற்றும் ஆயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று எழுதியிருந்தார்.
ஓபிஎஸ் திறந்து வைப்பார்
இந்நிலையில் சிவாஜி குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்பதாக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தன்னால் வர இயலாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
ஒபிஎஸ் திறப்பது திருப்தி
சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரபு கூறியுள்ளார். முதல்வர் வர இயலாத காரணத்தை தன்னிடம் விளக்கி கூறிவிட்டதாகவும் பிரபு தெரிவித்துள்ளார்.