எண்ணெய்க் கசிவு... ஒரு வாரத்திற்குப் பிறகு எண்ணூர் கடல் பகுதியைப் பார்வையிட்ட ஓ.பி.எஸ்
எண்ணூர் கடலில் எண்ணெய் பரவியுள்ள பகுதிகளை முதல்வர் ஓபிஎஸ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் உடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: எண்ணூரில் கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கடந்த 28ம் தேதி எண்ணூர் துறைமுகம் அருகில் கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதில் மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தன. கச்சா எண்ணெய் படலம் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை பரவி உள்ளது. இதனால் மீனவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
மேலும், பரவிய எண்ணெய்யை அகற்றும் பணிகள் ஒரு வாரத்திற்கு மேல் நடைபெற்றும் இன்னும் முடியவில்லை. வெறும் கைகளாலும், வாளிகளாலும்தான் எண்ணெய் அகற்றப்பட்டு வருகிறது. 1800 பேர் இப்பணியில் ஈடுபட்டாலும் எண்ணெய் அப்புறப்படுத்தும் பணிகள் மெதுவாகவே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எண்ணூர் பகுதிக்கு சென்று எண்ணெய் பரவிய பகுதிகளை பார்வையிட்டார். அப்போது துறைமுக அதிகாரிகளிடம் விபத்து குறித்து சுத்தப்படுத்தும் பணிகள் குறித்தும் விசாரித்ததார். முதல்வருடன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் உடன் சென்றார்.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், ராஜ்ய சபா எம்பி கனிமொழி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.