ஓபிஎஸ்சின் தர்மயுத்தம் ஓவர்.. தினகரன் சொல்லும் புது யுத்தம் பெயர் தெரியுமா?
சென்னை: முதல்வர் பதவியை பறிக்க சசிகலா காய் நகர்த்துவது தெரிந்ததும், ஜெயலலிதா சமாதியில் வந்து அமர்ந்த ஓ.பன்னீர்செல்வம் 45 நிமிட தியானத்திற்கு பிறகு, ஜெ. மரணத்திற்கு நியாயம் கேட்டு தர்ம யுத்தம் தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தர்ம யுத்தத்தில் வெற்றி கிடைத்துவிட்டதாக அறிவித்த பன்னீர்செல்வம், சில தினங்கள் முன்பு எடப்பாடி அமைச்சரவையில் துணஐ முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம்
இன்று நிருபர்களிடம் பேட்டியளித்த தினகரன், இதுகுறித்து கூறுகையில், தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையே யுத்தம் நடக்கிறது. தியாகத்தின் பக்கம் உள்ள தளபதிகள்தான் புதுச்சேரியிலுள்ளனர் என்று தெரிவித்தார்.
பாடம் புகட்டுவேன்
சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவேன் எனக் கூறியவர்களுக்கு பாடம் புகட்டுவேன். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிடில் விரைவில் குடியரசுத்தலைவரை சந்திப்பேன். நியாயம் நிச்சயம் வெற்றிபெறும். ஆளுநர் நல்ல நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தினகரன் தெரிவித்தார்.
திருப்பூர் பயணம்
என்னோடு நிற்பவர்கள்தான் உண்மையில் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள். கடவுளைத்தவிர வேறு யாரும் எங்களை மிரட்ட முடியாது என்றும் தெரிவித்தார் தினகரன். இதையடுத்து விமானம் மூலம் கோவை சென்ற தினகரன், திருப்பூரில் நடைபெறும் திருமணம் ஒன்றில் பங்கேற்க கிளம்பி சென்றார்.
குழப்பம்
ஏற்கனவே ஒரு தர்மயுத்தம் எப்படி முடிவுக்கு வந்தது என தெரியாமல் குழம்பிப்போயுள்ளனர் மக்கள். இப்போது தினகரன் தியாகம்-துரோகம் நடுவே யுத்தம் நடப்பதாக கூறியுள்ளதை புரிந்துகொள்வது எப்படி என்று மக்கள் கேட்கிறார்கள்.