அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும் - கமலை குத்திய ஓபிஎஸ்
அரசியல் வானில் பறக்கும் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் வெடித்துச் சிதறுவதை பார்க்கப் போகிறோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: நல்லவர்கள் போல மக்களை நாடி வருபவர்களின் வேஷம் கலைந்து போகும் என்றும், அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் வெடித்துச் சிதறும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்ஜிஆர் சிலைக்கு அருகில், ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஜெயலலிதா சிலையை வடிவமைத்த பிரசாத் என்பவருக்கு முதலமைச்சர் பழனிசாமி, தங்க மோதிரம் அணிவித்து பாராட்டினர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் காட்டமாகவே பேசினார். அவருக்குப் பின்னர் பேசிய ஒபிஎஸ் யாரையும் விட்டு விடக்கூடாது என்று கவனமாக அனைவரின் பெயரையும் அழைத்து விட்டு பேசினார்.
மக்கள் பாதுகாப்பு
அதிமுக ஆட்சியை நடத்துவது ஜெயலலிதா, கட்சியை நடத்துவது தொண்டர்கள் என்றார். ஒரு விரல் எம்ஜிஆர், மறு விரல் ஜெயலலிதா என வாழ்ந்து வருகிறோம். அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள்,பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
இதயத்தில் வாழும் ஜெயலலிதா
மக்களின் இதயத்தில், இல்லத்தில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து வருகிறார்கள். சொன்னதை செய்கின்ற, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி. ஆட்சியையும் , இயக்கத்தையும் நடத்துபவர் நாங்கள் அல்ல, ஜெயலலிதா நடத்துகிறார் தான்.
களவாட சதி
காலனின் கட்டளையை ஏற்று ஜெயலலிதா நம்மை விட்டு மறைந்து விட்டார். கண்ணீரை புன்னகையால் மறைத்துக் கொண்டு இந்த பிறந்தநாளை கொண்டாடி வருகிறோம். ஜெயலலிதா இல்லாத இந்த சூழ்நிலையில் அதிமுகவின் வெற்றியை களவாட சிலர் சதி செய்கிறார்கள். வஞ்சக வலையை அறுத்தெறிவோம், கட்சியையும், ஆட்சியையும் கட்டிக்காப்போம்.
வேஷம் கலையும்
நாங்கள்தான் மக்களை காக்கவந்த ரட்சகர்கள் என்று இப்போது சிலர் வலம் வருகிறார்கள். அவர்களின் வேஷம் விரைவில் கலைந்து விடும். மக்களை காப்பாற்றப் போவது நாங்கள் தான் என்பவர்களின் பேச்சு விரைவில் புஸ்வாணமாகும்.
பலூன்கள் வெடிக்கும்
அதிமுகவை வெல்ல நினைத்த கட்சிகள் எல்லாம் காற்றில்லாத பலூன்களாக சுருங்கிக் கிடக்கின்றன. இப்போது அரசியல் வானில் வண்ண வண்ண பலூன்கள் புதிதாக பறக்கின்றன. அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்; ஆனால் அவை வெடித்து சிதறுவதை நம் கண்முன்னே பார்க்கதான் போகிறோம் என்று போகிற போக்கில் கமல்ஹாசனையும் சாடினார் ஓபிஎஸ்.